="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

11

பாட்டு
வானவர் வணங்கும் மலையதுதனிலே
வந்திட்ட செந்தமிழ் மன்னா!
தானவர் நடுங்கும் தலமிதுதனிலே
சார்ந்திட்ட வேந்தர் வேந்தே!
பிறையணி பெருமான் அருளது தன்னால்
பெருமலை யிதனில் வாழும்
நிறைமொழி முனிவன் தமிழ்வளர்இனியன்
அகத்தியன் நிலைத்து வாழும்
பொதியநன் மலையின் பொற்புயர் சிகரம்
பொருந்திய பிளவங் கொன்றில்
அதிமது ரந்தரு கருநெல்லிக்கனி
அருமரம் அங்கே உண்டு
அம்மர மதனில் பன்னிராண்டுக்
கொருமுறை அக்கனி தோன்றும்
செம்மைகொள் அக்கனி தின்றவர் பன்னாள்
செகத்தினில் நீடு வாழ்வார்
நறுஞ்சுவை அக்கனி முற்றிடும் நன்னாள்
நண்ணிய துடனே செல்வாய்

அருங்கனி பெற்றினி துண்டுமகிழ்வாய்
அவனியில் நீடு வாழ்வாய்
இங்ங்னம் இயம்பி அம்முனி சென்றார்
இன்னருள் வள்ளல் விரைந்தான்
பொங்குயர் பொதிய மாமலைப் பிளவைப்
போய்க்கண்டு அரிதில் புக்கான்
வெடித்த பாறையுள் வீசியகிளைமேல்
மென்கனி தன்னைக் கண்டான்
துடித்திடும் உள்ளம் தூண்டிடஉச்சித்
தொங்கிடும் கனியைப் பறித்தான்
அமுதக் கனியதைப் பெற்ற அதியமான்
அரண்மனை விரைந்த டைந்தான்
தமிழ்முனி யளித்த தண்ணருள் அமுதம்
தானுண்டு வாழ விரும்பான்
பன்னாள் உலகினில் யானும் வாழ்ந்தால்
பயனே தும் விளைவ துண்டோ?
மன்னிடும் நூல்பல மக்களுக்கீயும்
மாதவளாம் ஒளவைக் கீவோம்
இவ்விதம் எண்ணி அரசவையிருந்தான்
இந்நேரம் ஒளவையும் வந்தார்.

 

வசனம்
அதியமான் தனது அரசவைக்கு வந்த அருந்தமிழ் மூதாட்டியாகிய ஒளவையாரை அகமகிழ்வுடன் எழுந்து சென்று வரவேற்றான். தனது அருகிலிட்ட தனி மணி பாசனத்தில் அமரச் செய்தான். கையில் வைத்திருந்த கருநெல்லிக்கனியைக் கன்னித்தமிழ் அன்னையாகிய ஒளவையாரிடம் அளித்தான். “தாயே! இதனை உண்ணாக!” என்று அன்போடு கூறினான். ஏதோ ஓர் சாதாரண நெல்  லிக்கனி என்று நினைந்து வாயிலிட்டுச் சுவைத்த ஒளவையார், அதனிடம் கண்ட அளவற்ற அமுதச் சுவையைக் கண்டு, உண்டு, களிகொண்டு, “ஆகா! அரசே! ஈதென்ன வியப்பாயிருக்கிறது! தேவர்கள் உண்டார்கள் என்று சொல்லப்படும் தெள்ளமுதத்தினும் நல்லமுதமாக அன்றே இந்த நெல்லிக்கனியுள்ளது! இது உனக்கு எப்படிக் கிடைத்தது? இதன் வரலாறென்ன?” என்று அதியமானே வினவினார்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.