="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

100 ராமனாதனின் கடிதம்

ராமனாதனின் கடிதம்

1

யாருக்கு எழுத… எல்லாருக்கும்தான்… நாளைக்கு இந்நேரம்… ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்’ என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது’ அட முட்டாளே! உனக்குத்தான் அப்படி. இந்த இரண்டு கால் ஓநாய் இருக்கிறதே அதற்கு வெறி… சீச்சி! உன்னைப்பற்றி எனக்கென்ன! நாகரிகம், நாகரிகம், படிப்பு, அந்த இழவுதானே! என்னை என் இஷ்டப்படி செய்து கொள்ள உரிமையில்லையாம்! உன்னைக் கேட்டுக்கொண்டா நான் பிறந்தேன்?

நான் துடிதுடித்துக் கொண்டு இருந்தேனே. அப்பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உரிமையுண்டு போலிருக்கிறது… அட, ஓட்டைப்பானை வேதாந்தமே!… பறந்து குதிக்கலாமே! அடடே! விளக்கின் கிட்டப்போகாதே. அது நாகரிகம்! என்னைப்போல் தீய்ந்து போவாய்! இல்லை, இல்லை. நீதான் பட்டதாரி. அந்த விளக்குத்தான் கலாசாலை… விளக்கினால் உள்ளத்தைக் கருக்க முடியுமா! அதால் உன்னைத் தூக்குப் போட்டுக் கொள்ளச் செய்ய முடியுமா? அதற்குள் குதிக்காதே. எழுதி முடியட்டும்.

எண்ணை இருந்தால்தானே! நாளைக்கு அந்த எண்ணைக் கடைச் செட்டியின் மூஞ்சியைப் பார்க்கவேண்டும். திட்டினானே நாக்கில் நரம்பில்லாமல். பயலுக்கு வேண்டும்! கொஞ்சம் பொறுத்துக்கொள். நானும் அணைய வேண்டும். நீயும் அணைய வேண்டும். இரண்டு பேறும் குதித்துக்கொண்டு…

அம்மா இருந்தால்! இருந்தால் என்ன? ‘படிக்க வச்சேன், பாட வச்சேன், பல்லுக்கருவான் பாதியிலே போனான்’ என்று அழுவா. அப்பறம்? நல்லகாலமாய் முன்னாலேயே போய்ச் சேர்ந்தாள். பொதுவிலே நல்லவள்தான்… அப்பா இருக்கிறாரே, படிபடி என்று திட்டித் திட்டி இந்தக் கதிக்கு கொண்டுவந்தாரே… அன்றைக்குக் ‘கிளாஸிற்கு’ டோ க்கர் விட்டுவிட்டு கோயில் மா மரத்திலே அந்த ராமாநுஜம் பயலோட குசாலாய் மரக் குரங்கு விளையாடும் பொழுது அடிச்சாரே, பாவி! என்ன, எங்கள் வீட்டு உங்கள் வீட்டு அடியா… அந்தப் பயல் சுத்த மசளை, களிமண்தான். பள்ளிக் கூடத்தில் அவனுக்கு அந்த வாத்தியார் வேட்டை! படிப்பே வராது… படிச்சென்ன பண்ண… இந்தக் கதிதான்.

கொஞ்சச் செலவா? ரூ.2000 இருக்கும். ஏன், அதற்கு மேலே வட்டிக்காவது போட்டால் இந்தக் கதி வருமோ? இந்த மண் குதிரையை நம்பி கொண்டுவந்து கொட்டப் போகிறான் என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் விற்றுத் தொலைத்தார். அவர் என்ன செய்வார்? பாவம், பழைய காலத்து மனுஷ்யன்.

வேலை காய்த்துத் தொங்குகிறது, பறிக்க வேண்டியதுதான் பாக்கி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் பாடு கொஞ்சம் கஷ்டந்தான். என்ன, இன்னும் கொஞ்ச நாளில் அவரும் சாம்பல்தானே. நான் பட்டதையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வரட்டுமே. அவர் சாம்பல், நான் மண்… இந்த வயிற்றைத்தானே நாளைக்குக் கீறுவான். அதற்குள் எரிச்சல் எல்லாம் அவிந்து போயிருக்கும். ஓய் டாக்டரே! உமக்கு கை ஒன்றும் சுட்டுப் போகாது. குசாலாய்க் கீறும்… உம்! விஷம் இருக்கிறதா என்று பார்க்கவாக்கும்.

2

இந்த ஒண்ணாந்தரம் மணிக்கயிறு இருக்கிறபோது விஷம் வேறா? இரட்டை மேளமாட்டமாய்! தபேலா!… ஆமாம் அந்த ராஸ்கல்தான் ராமானுஜம். அமச்சியூர் டிராமாவிலே தபேலா அடிக்கிறதுதான் – இப்பொழுது வக்கீலாம் – கண்ட பலன். அந்தப் பயலை நேத்திக்கு 1 ரூ. கேட்டேன். குரங்கு, முகத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போய்விட்டது. அந்தக் காலத்திலே கணக்குக்கூட அவனுக்குப் போட்டுத் தொலைச்சிருக்கேன்! முதலில் டிக்கட் வேற என்னிடம் விற்க வந்தது… நீயேன் சொல்ல மாட்டாய்… உன் கையிலும் நாலு காசு இருந்தால் அப்படித்தான். அட முட்டாளே! உனக்கு வேலை பார்க்கத் திறமில்லாவிட்டால்? ஏறி இறங்கின படிக்கட்டு காலுக்குத் தெரியும். பட்ட இடி மனதிற்குத் தெரியும். தொழில் செய்ய மூளை இருக்கிறது.

வெற்றிலைக் கடையாவது வைக்க காசு? மூட்டை தூக்க வேண்டும். ஜம்பத்தை எல்லாம் கட்டி வைத்துவிட்டு, டிரில் டிரில் என்று ஈ விரட்டின பலத்திலே – அதற்கு எத்தனை டிமிக்கி – எத்தனை சோற்றுப் பொட்டணம் தூக்க முடியும்! அவன் தான் அந்த மக்காலி, உன்னைக் குமாஸ்தாவாகப் பிடித்துவைக்க திட்டம் போட்டானே. பயலை முக்காலியில் கட்டி அடிக்க வேண்டும்! சீ! கண்ணில் கொசு விழுகிறது. சாகிற கழுதைக்குக் கண்ணில் கொசு விழுந்தால் மோசமோ!… பாரதியைப் பட்டினி போட்டுக் கொன்ற பயல்களல்லவா.

அவனை மூட்டை தூக்கச் சொல்லக்கூடாது. நைந்துபோனவனைக் கொன்று விடுவதுதானே இயற்கை, உங்கள் ஓநாய் வேதாந்தம். அவனுக்குக் கவிதையாவது இருந்தது நீங்கள் இப்பொழுது பாரதியார் என்று பெருமையடித்துக்கொள்ள. எல்லாம் விதி, விதி. என்னைப் போல் எத்தனை பேர். அவர்களின் துயரத்தை நீக்கும் ஆகுதியாக நான். தற்கொலை இல்லை. தற்கொலை செய்பவன் கோழையாம்! நீ செய்துபார்.

ஒய்யாரமாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவதைப் பாரேன். அதற்கும் ஒரு பிசாசுத் துணிச்சல் வேண்டும். பட்டாளத்து ஸோல்ஜர் சாகப் போகிறது தெரியாமலா போகிறான். அது மட்டும் தற்கொலையல்ல, வீரம்! சமூகத்திற்கு தியாகம்; தியாகம்… நன்றாயிருக்கிறது! நானும் அவனைப்போல் எனது கதியிலுள்ள முட்டாள் பூச்சிகளுக்கு அவசரப்படாதே. இதோ அந்த பிவட்டல் ஜாயிண்டில் (Pivotal Joint) சரியாக வைத்து ஒரு இறுக்கு, ஒரு குதி! ஜேக்கப் ஏணி தெரியுமா? பரீட்சைக்குக்கூட வந்ததே. அது ஒரு மாதிரி. இது நாகரிக நூலேணி. உங்களுக்கு இவ்வளவு போதும். நான் இருக்கிற வரை நீங்கள் தூக்கி நிறுத்தின மண்ணாங்கட்டிக்கு இவ்வளவு நீளம் போதாதா?

இறக்கும்வரை
வெறுக்கும்
ராமனாதன்.

(முற்றும்)

சுதந்திரச் சங்கு, 01-06-1934

License

ராமனாதனின் கடிதம் Copyright © by manarkeni. All Rights Reserved.