="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

88 புதிய கூண்டு

புதிய கூண்டு

1

அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது, திருநெல்வேலி ஜில்லாவின் வசீகர சக்தியின் ஒரு பகுதி அது.

சாயங்காலம்.

வேனிற்கால ஆரம்பமாகையால் இரண்டாவது அறுவடை சமீபித்துவிட்டது. பயிர்கள் பொன்னிறம் போர்த்து, காற்றில் அலை போல் நிமிர்ந்து விழுந்து, ஆகாயத்தில் நடக்கும் இந்திர ஜாலங்களுக்குத் தகுந்த, அசைந்தாடும் பொற்பீடமாக விளங்கியது.

அகன்ற மார்பில் யக்ஞோபவீதம் போல் ஆற்றில் நீர் பெயருக்கு மட்டிலும் ஓடிக்கொண்டிருந்தது. நீர், ஸ்படிகம்போல் களங்கமற்று மனிதனைக் குனிந்து அள்ளிக் குடிக்கும்படி வசீகரித்தது.

ஆற்றுமணலில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் இரு மாணவர்கள் நடந்து கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒரு கையில் புஸ்தகம், மற்றொரு கையில் போஜனப் பாத்திரம் என்ற மாணவ சின்னங்கள். இருவரும் ‘குடுத்துணி’ மட்டும் அணிந்து இடையில் ஒரு நாட்டு வேஷ்டி கட்டியிருந்தனர். ஒருவன் மூத்தவன்; இன்னொருவன் சற்று வயசில் குறைந்தவன். இருவரும் சகோதரர் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை; முகத்தோற்றமே தெரிவிக்கும் இருவரும் நல்ல அழகர்கள் மூத்தவன் அதிதீக்ஷண்ய புத்தியுடையவனாயினும் கறுத்த கண்களும் கூரிய நாசியும் சற்று அகன்ற நெற்றியும் சற்றுத் தடித்த ஆனால் அழகான உதடுகளும் அவன் சிறிதே உணர்சிவசப்படுகிறவன் என்பதைத் தெரிவித்தன. தம்பியின் மெல்லிய உதடுகள் திடசித்தமும் எதையும் தனது அறிவுத் தராசில் போட்டு நிறுக்கும் உறுதியும் உடையவன் என்பதையும் தெரிவித்தன. இருவரும் ஒற்றைநாடியான சரீரம். அவர்கள் குடுமி, தற்கால அழகுணர்ச்சியைத் திருப்தி செய்யாமல் குறுக்கே விழுந்தாலும், பொதுவாக அவர்களைப் பார்த்ததும் அழகர்கள் என்பதை எடுத்துக் காட்டத் துணைபுரிந்தன.

இருவரும் மிக வேகமாக நதியைக் கடந்தனர். முகத்தின் சோர்வும் களைப்பும் அவர்களைப் பேசவிடாமல் தடுத்து, வீடு என்ற ஒரே எண்ணத்தை மனசில் நிறுத்தியதால் அவர்கள் மிக வேகமாகச் சென்றார்கள்.

தோப்பைத் தாண்டியதும் திடீரென்று ஒரு வரிசை வீடுகள்; தெருவின் மேற்குக் கோடியில் ஒரு கோயில்; அதுதான் நாரணம்மாள்புரம் என்ற அக்கிரகாரம்.

நாரணம்மாள்புரம் மகாவிஷ்ணுவின் பெயரை வைத்துக்கொண்ட மட்டிலேயே திருப்தியடைந்தது. செல்வம் என்பது என்னவென்று கேட்கக்கூடிய மாதிரி அதன் சகோதரனின் ஆதிக்கம் அங்கே தாண்டவமாடியது.

2

மீனாட்சியம்மாள் ஒரு விதவை. தகப்பனார் வீட்டில் தரித்திரம். புக்ககம், நம்பிக்கையைக் கொண்டு உயிர் வைத்திருக்க வேண்டிய இடம். போதாததற்கு இரண்டு ஆண் குழந்தைகளின் பொறுப்பை அவள் தலையில் சுமத்திவிட்டு அவள் கணவன் இந்த உலகத்தை நீத்தார். அந்த மட்டில் பெண் சுமையை ஏற்றாமல் போனாரே என்ற ஆறுதல் தான் அவளுக்கு.

மீனாட்சியம்மாள், இட்டிலி, முறுக்கு, அப்பளம் இட்டு அவைகளிலே தன் இரண்டு பொறுப்புக்களின் சம்ரட்சணையையும் நடத்தி வருகிறாள். பாதிரிகளின் பள்ளிக்கூடத்துப் புண்ணியவான்களின் உதவியால் தன் புத்திரர்களுக்குக் கல்வி என்ற மகத்தான கண் திறக்கப்படுவதற்காகத் தனது பூஜைகளில், அவர்களுக்காகக் குலதெய்வத்தை மீனாட்சியம்மாள் தொழுது வந்தாள். இப்பொழுதும் வெள்ளைக்காரன் என்றால் மீனாட்சியம்மாளுக்குத் தெய்வத்திற்கு நிகர் தன் புத்திரர்களுக்குக் கல்வியை இலவசமாகப் போதிக்கும் தயாநிதிகளை யார்தாம் போற்றாமல் இருப்பார்கள்!

வீட்டு முற்றத்தில் ‘அம்மா’ என்ற குரல் தன் புத்திரர்கள் வந்து விட்டார்கள் என்பதைத் தெரிவித்தது. புறக்கடையில் உழுந்து கழுவிக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள், “அம்பியா? அண்ணாவும் வந்தாச்சோ? கையைக் காலைக் கழுவிப்பிட்டு, இந்த உறியிலே முறுக்கு வெச்சிருக்கேன்; எடுத்துச் சாப்பிடுங்கே. கையிலே உளுந்து இருக்கு” என்றாள்.

அம்பி புஸ்தகத்தை வைத்துவிட்டு வருமுன், அவனுடைய மூத்த சகோதரன் புஸ்தகத்தை ஜன்னலில் வைத்துவிட்டுக் கால் முகம் கழுவ நேரே புறக்கடைக்கு ஓடி வந்தான். வைத்த அவசரத்தில் புஸ்தகங்கள் கீழே விழுந்தன. அம்பி அதையும் ஜாக்கிரதையாக எடத்து வைத்துவிட்டுச் சட்டையைக் கழற்றிய பிறகு உள்ளே வந்தான்.

“என்னடா, தீட்டையும் கீட்டையும் அப்படியே உள்ளுக்குக் கொண்டுவர்றே? அம்பிக்கு இருக்கிற புத்திகூட, ஏண்டா கிட்டு ஹும் நான் தான் பொண்ணாப் பிறந்தேனே…” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

கிட்டு சிரித்துக்கொண்டே, “அம்மா, உன்னைத் தொட்டுவிடுவேன்; பேசாதே” என்று நெருங்கினான்.

“அடே, கட்டேலெ போறவனே, சித்தெ மடியா கிடியா இரு” என்று பதறினாள் மீனாட்சி.

“என்னடா கிட்டா, அம்மா கிட்ட என்னடா! அவளுக்குத் தெரியுமோ” என்றான் அம்பி.

3

இருவரும் காலைக் கழுவிவிட்டு, தாய் வைத்திருந்த முறுக்கைச் சாப்பிட்டுவிட்டு ஆற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.

“அம்பி, பரீக்ஷை நெருங்குகிறதே” என்றான் கிட்டு.

“அதற்கென்ன அண்ணா! பயமில்லை” என்று சொல்லிவிட்டுத் தன் நண்பன் ஒருவனைத் தேடிக் கொண்டு சென்றுவிட்டான்.

கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி இந்த வருஷம் பி.ஏ. பரீட்சைக்குச் செல்ல இருக்கிறான். அவன் சகோதரன் அம்பி – அவன் பெயர் ராமசாமி – இண்டர்மீடியட் பரீட்சைக்குப் போகிறான். இருவரும் பாளையங்கோட்டையில் இருக்கும் கிறிஸ்தவக் கலாசாலையில் படிக்கிறார்கள். கிட்டு, தனக்குப் பரீட்சை தேறியதும் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு குடும்ப சம்ரட்சணையில் களைத்த தன் தாயின் கவலையை நீக்கிவிடுவான் என்பதுதான் அவர்கள் தற்போது கொண்ட லட்சியம். மேலும் சகோதரனது கல்விக்கு இனியாவது தர்மத்தை எதிர்பாராது இருக்கவேண்டும் என்பதும் அவன் நோக்கம்.

பாளையங்கோட்டை கிறிஸ்தவக் கலாசாலை ரோமன் கத்தோலிக்க மதத்தினருடையது. அதாவது இருள் சூழ்ந்த பிரதேசங்களில் கர்த்தருடைய மதத்தைப் பரப்ப ரோமாபுரியிலிருந்து அனுப்பப்படும் கருவி. தன் கையை வைத்தே தன் கண்ணில் குத்திக் கொள்ள வைப்பதுபோல் பழகிய யானையை வைத்துக்கொண்டு காட்டு யானைக் கூட்டங்களைப் பிடிப்பதுபோல், இந்தத் தொழில் நடந்து வந்தது.

ஞானாதிக்கம் என்ற கிறிஸ்தவச் சாமியாருக்குக் கிட்டுவின் மீதும் அம்பியின் மீதும் ஒரு கண். அதாவது ரோமாபுரியில் பேதுரு அப்போஸ்தலர் கட்டிய மகத்தான கோவிலின் சக்தியைப் பரப்ப இந்த இருவரும் ஏற்றவர்கள் என்பது அவர் துணிபு. அதனால் இருவரைப் பற்றியும் அவர் மிக்க கவலை மேற்கொண்டார். இது மறைமுகமாகவே நடந்தது. ஆனால் நாளடைவில் கிட்டுவை மிக எளிதில் வசப்படுத்திவிடலாம் என்றும் அம்பியிடம் தம் முயற்சி சாயாது என்றும் கண்டுகொண்டார். ரோமாபுரி போப்பின் ஆதிக்கத்தையும் கர்த்தரின் பரிசுத்தமான வார்த்தைகளையும் பரப்புவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

ஞானாதிக்கம் சாமியார் ஓர் உண்மைக் கத்தோலிக்க பாதிரியார். அவர் தமக்குத் தோன்றிய உண்மைகளுக்குத் தம் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தவர். அம்பியையும் வசப்படுத்துவதற்கு ஒரு புது வழியைத் தேடிக்கொண்டிருந்தார். ஏனெனில் அம்பியிடம் கிறிஸ்தவ தர்மத்தையும் ஹிந்து சமயத்தின் தவறுகளையும் பற்றித் தர்க்கிக்க ஆரம்பித்தால் அவன் அதற்கு இடம் கொடுப்பதே இல்லை. “தர்க்க சாஸ்திரமும் சமயமும் ஒத்துவராது; வேண்டுமானால் எங்கள் பண்டிதர்களிடம் தர்க்கம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவான். ஆனால் கிட்டுவை, உணர்ச்சியில் மயங்கக்கூடிய கிட்டுவைத் தர்க்கத்திற்கு இழுக்காமல் கிறிஸ்தவ நாயன்மார்களின் தியாகத்தையும் தரிசனத்தையும் காண்பிக்கும் இலக்கியங்களினால் பண்படுத்திவந்தார்.

4

ஸ்ரீ ஜான் சகரியாஸ் நாடாரின் முன்னோர்கள் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது திருநெல்வேலி ஜில்லாவிலே ஒரு ரஸமான கதை. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்து, வியாபாரப் பொருள் உற்பத்தி முறையில் ஒரு நூதன வழியைக் கடைபிடித்தது. பொருள்களை ஏக காலத்தில் நூற்றுக்கணக்காகச் செய்து குவிப்பதில் பெரும் நம்பிக்கை வைத்தது; அதே சமயத்தில் பாதிரிகள், இந்தியாவின் தெற்கு மூலைகளில் நூற்றுக்கணக்காக ஞானஸ்நானம் கொடுப்பதில் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் நாசரேத், மெய்ஞ்ஞானபுரம் முதலிய பிரதேசங்களில் வந்ததும், முன்பு, கிறிஸ்து பிறப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்பு, “உண்டாகுக” என்று கர்த்தர் அருளியதும், உலகம் அவர் போட்ட வரிசைப்படி தழைத்து அப்பெருமானுக்குக் களிப்பூட்டியதாம். இதைப்போல இந்தப் பாதிரிகளும் அந்தப் பிரதேசங்களை அடைந்ததும் தாங்களே கர்த்தர் பெருமான் என்று நினைத்துக்கொண்டனரோ என்னவோ? அங்கிருந்த நாடார்களை நீரைத் தெளித்து, ‘நீங்கள் கிறிஸ்தவர்களாகக் கடவது!’ என்றதன் பயனாக விளைந்தவற்றில் சகரியாஸ் குடும்பமும் ஒன்று.

அவர் அங்கிருந்த புரோட்டஸ்டாண்ட் பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியர். தமக்குக் கர்த்தருடைய கருணை கிடைத்த போதெல்லாம் அஞ்ஞானிகளுக்கு விழிப்பைக் கொடுப்பதில் முனைந்து வந்தார்.

அவருக்கு ஒரு புதல்வி. எந்த மதத்தினரானாலும் உபாத்தியாயர்களுக்கு மட்டும் வம்ச விருத்தியில் தனிச் சிறப்பு உண்டு. அதற்கு விலக்காக இருந்தார் ஸ்ரீ சகரியாஸ். அவருக்கு அந்தப் புதல்வியே மகன், மகள் என்ற இரண்டு ஸ்தானத்தையும் நிரப்பி வந்தாள். அவள் பெயர் லில்லி அற்புதம் ஜயலக்ஷ்மி. அவள்தான் அவர்கள் குடும்பத்தின் விளக்கு; உயிர் நாடி; அதாவது அவள்தான் அந்த வீட்டில் ஒரு முசேலினியின் எதேச்சாதிகாரத்தை ஸ்தாபித்து வந்தாள். பிரேமையினால், தாய் தந்தையர் இருவரும் அவளுக்கு அடிமைகள்.

அவளுடைய அழகு ஆளை மயக்கும் போதைப் பொருள் போன்றதல்ல; மனசில் கனவுகளைத் தோற்றுவிக்கும் ஓர் இன்பகரமான மோகன அழகு. அதன் பின்னே ஒரு சாந்தியின் சோபை அவளுடன் பேசுவதில் பெரும் இன்பத்தைக் கொடுத்தது. தமிழ்க் கவிஞர்களின் கனவுகள் எல்லாம் திரண்டு வடிவெடுத்தது போன்றது அவள் தேக அமைப்பு.

கிறிஸ்தவ சமூகத்தின் சுதந்திரமும் சிறுமைப் புத்தியும் அறிவும் படைத்தவள். கணக்கு, விஞ்ஞானம் முதலியவற்றில் ஒரு விதப் பிரேமை; அதில் ஆசையோடு ஈடுபட்டவள் என்று கூற முடியாது. பள்ளிக்கூட உலகத்திலே, அந்தப் பாடங்களைப் படிப்பவர்கள் எல்லாரும் பெரிய மேதாவிகள் என்ற ஓர் அபிப்பிராயத்தை உபாத்தியாயர்களும் மாணவர்களும் சேர்ந்து வளர்த்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஒரு போட்டி மனப்பான்மையில் அவள் அதைப் படிக்க ஆரம்பித்திருக்கலாம். ஆனால் கலாசாலையைப் பொறுத்தவரையில் அவர்கள் ‘மார்க்கு’ என்ற அளவுகோலைப் பொறுத்தவரையில் அவள் கெட்டிக்காரிதான்.

5

இவள் தெரிந்தெடுத்த பாடங்களை உடையது அந்தக் கத்தோலிகர் கலாசாலை ஒன்றுதான். அதனால் அவள் அங்கே சென்று படிக்க வேண்டியதாயிற்று.

வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால் இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டு அற்று இருப்பது விதிக்கு விலக்கு. ஆனால் ஒன்று ஆணும், மற்றது பெண்ணுமாக இருந்தால்…? அது… தான் நடக்கவில்லை.

அம்பி, ஹிந்து தர்மம் என்றால் ஏதோ புனிதமான பொருள் என்று அவளை வெறுப்புக் கண்களால் நோக்கினான். அது கிறிஸ்தவக் கலாசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு உண்டாகும் ஒரு தனி மனப்பான்மை. சில சமயம் அசட்டுச் சமய வெறி என்ற மூடக் கொள்கை வரையில் கொண்டுபோய் விட்டுவிடும் அம்மனப்பான்மை. நல்ல காலம், அம்பிக்கு இந்த வியாதி பீடிக்கவில்லை. ஏதோ அவன் வயசிற்கு மேற்பட்ட அதிதீஷண்ய அறிவில் ஹிந்து தர்மத்தின் உயிர்நாடியை அறிந்து கொண்டான். அதனால் அவளைப் பார்க்குந்தோறும் ஒரு பரிதாபம் அவனுக்குத் தோன்றும். ஹிந்துப் பெண்ணாக, நாடாராகவே இருந்துவிட்டாலும் காதலிக்கலாம் என்ற கனவில் இருப்பவனுக்கு இது இயற்கைதானே?

அற்புதம் ஜயலக்ஷ்மி அவனை அஞ்ஞானி என்ற முறையில்தான் அறிந்திருந்தாள். அதுவும் அல்லாமல் அழகை மறைக்கும் தரித்திரமும் குடுமியும் அவனை அவள் அறிவதற்குப் பெருந்தடையாக இருந்தன. ஆனால் அவன் அறிவுத் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியாயினும் அஞ்ஞானி; அதுவும் குணப்படுத்த முடியாத அஞ்ஞானிதானே அவன்!

ஏறக்குறைய பரீட்சைக் காலமும் நெருங்கிவிட்டதால் ஆசிரியர்களின் நம்பிக்கையெல்லாம் இவர்களுடைய கீர்த்தியைக் கொண்டு வரும் வெற்றியைக் குறித்தவண்ணமாக இருந்தது.

அன்று ரசாயன அறையில் இருவரும் ஒரு ரசாயன சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் அடுத்தடுத்த மேஜையானாலும், இருவரும் அந்த இரண்டு வருஷங்களில் இரண்டு முறை பேசியிருப்பார்களோ என்னவோ? ஆனால், அவர்கள் பேசாதது கூச்சத்தினால் அல்ல.

6

ரசாயன வகுப்பில் மாணவர்களின் சிறு குறும்பிற்குத் தகுந்த வசதிகள் இருக்கின்றன. ஒன்றுமில்லை; சாக்குக் கட்டியைப் பொடித்து மேஜையில் பதித்திருக்கும் இங்கிப் புட்டிகளில் போட்டுவிட்டால் அது பொங்கிப் பக்கத்தில் இருக்கிறவர்கள் உடைகளை நாசமாக்கிவிடும். இதைவிடச் சிறிது அபாயகரமான, ஆனால் குஷியான வேடிக்கை இரண்டு மூன்று அமிலங்களை ஒன்றாகக் கலந்து வைத்துவிடுகிறது; அது சில சமயம் டபீர் என்று வெடித்து உடைகளைச் சிதைத்துவிடும். சில சமயம் தேகத்தில் பட்டுப் பொத்து விடுவதும் உண்டு.

அன்று இருவரும் ரசாயன சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது – (இயற்கையான வகுப்புச் சமயம் அல்ல) ஜயலக்ஷ்மியின் பக்கத்தில் ஒரு பாட்டில் டபீர் என்று வெடித்து அவள் உடைகளை நாசமாக்கிவிட்டது. ஜயா பயந்துபோய்ச் சிறு கூக்குரலிட்டாள். அம்பி திடுக்கிட்டு நின்றான். அடுத்த கணம் ஜயாவிற்கு பயம் தெளிந்தது.

“மிஸ்டர் ராமசாமி! இந்த மாதிரிக் குறும்புசெய்யும் ஒரு கோழை என்று தங்களை நான் நினைக்கவில்லை” என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

அம்பிக்குச் சுறுக்கென்று அவ்வார்த்தை உள்ளத்தே தைத்தது. அவனும் பெருமிதமாக, “ஒரு ஹிந்து கோழையல்ல” என்று சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.

அவளுக்கு இது தன் மதத்தினரைக் கேலி செய்த மாதிரிப் பட்டது. உடனே ஆசிரியரின் உதவியை நாடி – கத்தோலிக்கராயினும் கிறிஸ்தவர்தானே – இவனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று சரேலென்று வெளியே சென்றாள்.

நேராக ஞானாதிக்கம் சாமியாரிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, தம் லட்சியத்திற்கு ஒரு வழி அகப்பட்டதென்று நினைத்தார் அவர். இதை வளர்ப்பது (அவர் ஊடல் என்று நினைத்தார்) இவ்விருவரையும் தமது மதத்திற்கு அவளுடன் கொண்டுவரும் வழி என்று நினைத்து, அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு “உனக்கு ஹாஸ்ய உணர்ச்சி போதாது. நான் அவனைக் கண்டிக்கிறேன். நீ, ஏன் அவனுடன் சண்டை பிடித்துக் கொள்ள வேண்டும்?” என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஜயாவிற்கு இது திருப்தி அளிக்கவில்லை. அதுவும் அல்லாமல் அவருடைய நடத்தை ஆச்சரியமாக இருந்தது.

7

ஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்பியை எப்படியாவது தண்டனை பெறச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அவன் அதைச் செய்திருப்பானோ, இல்லையோ என்ற பிரச்சனையே இப்போது இல்லை. தன்னால் அவனை என்ன செய்ய முடியும்? இப்பொழுது அவன் அண்ணனிடம் சொன்னால்? அப்படித்தான் செய்ய வேண்டும். அதுதான் அவள் மனப்போக்கு.

அன்று சாயந்தரம் கலாசாலை விட்டாயிற்று. கிருஷ்ணமூர்த்தி நேராக ‘லைப்ரரி’க்குச் சென்றான், வாசிப்பதற்குப் புஸ்தகம் ஏதாவது எடுத்துக்கொண்டு செல்ல.

அங்கே ஜயா அவனைச் சந்தித்தாள்.

“மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒரே ஒரு வார்த்தை” என்றாள்.

எப்பொழுதும் பெண்களுடன் – அதாவது தாயைத் தவிர – வேறு யாருடனும் பேசிப் பழகாதவன் சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

“என்ன!” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

ஜயலக்ஷ்மிக்கு உள்ளூர நகைப்பு. ‘இந்த அஞ்ஞானிகள் பெண்களுடன் பேசுவதென்றால் என்ன இவ்வளவு கோழையாக இருக்கிறார்கள்! ஒரு கிறிஸ்தவப் பையன் இப்படி இருப்பானா? இவனைச் சிறிதே கிண்டல் செய்யவேண்டும்’ என்று நினைத்தாள்.

“உங்களுடன் தனியாகச் சற்றுப் பேச வேண்டும்; வராந்தாவிற்கு வாருங்கள்” என்றாள்.

கிட்டுவிற்கு உடல் முழுவதும் வியர்த்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? பதில் பேசத் தைரியம் இல்லை. பின்னால் சென்றான்.

அவள் அன்று மத்தியானம் நடந்ததை, அம்பி செய்ததை, கூறினாள்.

8

கிட்டுவிற்குப் பிரமாதமான கோபம் வந்துவிட்டது; “அவன் வரட்டும் கண்டிக்கிறேன்; நீங்களும் இருங்கள். உங்கள் முன்னிலையிலேயே” என்றான் கிட்டு.

கீழே ‘காம்பவுண்டி’ல் அம்பி நிற்பதைக் கவனித்தான் கிட்டு. “அம்பி! உயரே வா?” என்று கூப்பிட்டான். அந்தக் குரலில் கோபமும் பெருமிதமும் கலந்திருந்தன.

“அவன் வரட்டும்; அவனுக்குப் புத்தி கற்பிக்கிறேன்.”

அம்பி வந்தான். மத்தியான சம்பவம் அவனுக்கு ஞாபகமே இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் நின்றிருப்பது ஆச்சரியமாக இருந்தது.

நெருங்கினான்.

“என்னடா அம்பி! இத்தனை நாள் உன்னை மனிதனாக நினைத்திருந்தேன். உனது ‘கிளாஸ் மேட்’டினிடம், அதுவும் ஒரு பெண்ணினிடம் இந்த மாதிரிக் குறும்புத்தனமாக நடக்கலாமா?” என்று கோபித்தான் கிட்டு.

அம்பிக்குத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனை நாள் தன்னுடன் நெருங்கிப் பழகிய கிட்டுவே இப்படி நினைத்தால்… அவனுக்குக் கோபம் வந்தது.

“தாங்கள் எத்தனை நாளாக இந்தக் காலேஜில் பிரின்ஸிபால்” என்று கிட்டுவைக் கேட்டுவிட்டு, “தங்களுக்குப் பிரின்ஸிபால் யாரென்று தெரியாவிட்டால் நான் அறிமுகம் செய்துவைக்கிறேன்” என்று ஜயாவைப் பார்த்தான் அம்பி.

இதற்கு முன் எதிர்க்காதவன், அடங்கியிருக்க வேண்டியவன் எதிர்த்தால் ஏன் கோபம் வராது? கிட்டு, பளீரென்று கன்னத்தில் அடித்தான். இதை எதிர்பார்க்காத அம்பி மலைத்துக் கல்லாகச் சமைந்தான். அடிகள் வெகு பலமாக, மூர்க்கமாக, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன.

ஜயாவின் நிலைமை மிகக் கஷ்டமாகிவிட்டது; ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. அவள் எதிர்பார்த்தது ஓர் அதட்டல், ஒரு மன்னிப்பு. ஆனால் இப்போது அம்பியின் மீது இரக்கம்!

9

“மிஸ்டர் கிட்டு? நிறுத்துங்கள், இதென்ன? நிறுத்துங்கள்…”

அம்பிக்கு ஏற்பட்ட மலைப்பு நீங்கியது; “நீயா அண்ணன்?” என்று கூறிக்கொண்டே கிட்டுவின் மூக்கிலும் முகத்திலும் இரண்டு குத்துவிட்டான்.

அந்தக் குத்தில் கிட்டுவிற்குத் தலை சுற்றியது; அம்பியின் குத்து ஒன்று வயிற்றில் விழுந்தது அவ்வளவுதான். ஆனால் அம்பி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டிவிட்டான்.

“அட மிருகமே!” என்று மறையும் உருவத்தைப் பார்த்து எரிந்து விழுந்துவிட்டு ஜயா கீழே விழ இருந்த கிருஷ்ணசாமியைத் தாங்கினாள். வாலிபனை, வெறும் கனமான உடலை, தாங்கப் போதுமான சக்தி அவளுக்கு இல்லை. பாரம் அவளைக் கீழே இழுத்தது. ஆனால் லாவகமாகத் தாங்கியபடியே கீழே படுக்க வைத்தாள். கிட்டுவிற்கு மூச்சுப் பேச்சு இல்லை. ஜயா பயந்து நடுநடுங்கிவிட்டாள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. மடியில் தூக்கிக் கிடத்தியவண்ணம், “கிருஷ்ணசாமி! கிருஷ்ணசாமி!” என்று அவன் பெயரைக் கூப்பிட்ட வண்ணமாக இருந்தாள். கையிலிருந்த கைக்குட்டையால் அவன் முகத்தைத் துடைத்தாள். சற்று விசிறினாள்.

மெதுவாக, “அம்பி!” என்று கூப்பிட்டுக் கொண்டே அவன் கண்ணைத் திறந்தான்.

கிட்டு ஒரு பெண்ணின் மடியில் இருப்பதை உணர்ந்ததும் உண்டான கூச்சம், அவனைத் தடுமாறி எழுந்திருக்கச் செய்தது.

அவர்கள் கண்கள் சந்தித்தன. ஜயா சிரித்தாள்; ஆனால் அவன் கண்கள் கலங்கின.

“கிட்டு!” என்றாள். கிட்டுவின் மனம் அவன் வசம் இல்லை. அவளை நோக்கிக் கைகளை விரித்தான். ஜயாவின் மார்பு அவன் மார்பில் விழுந்தது. அவளுடைய கரங்கள் அவன் கழுத்தைச் சுற்றின.

10

அடுத்த கணம் நிலைமையை அறிந்து இருவரும் விலகினார்கள். ஜயாவின் முகம் நாணத்தால் சிவந்தது.

“ஜயா!”

“கிட்டு!”

ஜயாவிற்கு முகம் அவனுடைய மார்பில் மறைந்தது. அவளை வாரியெடுத்துத் தனக்குச் சொந்தமாக்கினான். அவள் அவனைத் தன்னுள்ளத்தில் சிறை செய்தாள்.

“நாளைக்கு உன் அப்பாவிடம் கேட்போம்” என்று கிட்டு சொன்னதும் ஜயாவின் கனவு பாழானதுபோல், அவளுக்குப் பட்டது.

அவன் அஞ்ஞானி! அவள் கிறிஸ்தவப் பெண்.

11

அம்பியும் கிட்டுவும் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது எத்தனை தடவை ‘டூ’ விட்டுக் கொண்டார்கள் என்று அம்பிக்கு ஞாபகம் இல்லையானாலும் இந்த மாதிரி எதிர்பாராதவிதமாய், எதிர்பாராத காரணத்திற்காகப் பெரும் சண்டையிட்டுக் கொள்ளுவோம் என்று அவன் நினைக்கவேயில்லை. அதிலும் தன்னுடைய அண்ணன் இப்படி இருப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை. ஆதலால், அம்பிக்கு அவனுடன் பேசவே மனமில்லை. இருவரும் ஒன்றாக வீட்டிற்குச் செல்லும் வழக்கம் நின்றது.

இது கிட்டுவிற்கு ஒரு விதத்தில் நன்மையாகவே இருந்தது. அவன் சென்ற பிறகு செல்வது என்ற காரணத்தை வைத்துக்கொண்டு ஜயாவை அடிக்கடி சந்திக்க வசதி ஏற்பட்டது அவனுக்கு.

ஜயாவிற்கு அந்த முதல் உணர்ச்சியில் தன்னை மறந்ததாக, வீட்டிற்குச் சென்ற பிறகு நொந்துகொண்டாளாயினும் கிட்டுவை அடிக்கடி சந்திக்கவே, படிப்படியாக அவன் ஓர் அஞ்ஞானி என்ற எண்ணமும் அவள் தனிமையாய் இருக்கும்பொழுதும் தோன்றாமல் ஒழிந்தது.

கிட்டுவிற்கு ‘இனிமேல்’ என்ற நினைவு ஏற்படாதிருந்ததில் ஆச்சரியம் இல்லை. உணர்ச்சி விஷயங்களில் இனிமேல் என்ற பிரச்னையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள். தன்னை ஒப்புக்கொடுப்பது. தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண் மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்துவிடுகிறார்கள் அப்பெண்கள்.

சம்பவம் நடந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சாயந்தரம் இருவரும் சந்தித்தபோது, ஜயா பேச்சை அந்த விஷயத்தில் திருப்பினாள். “கிட்டு, நான் ஒன்று கேட்கப் போகிறேன். கோபித்துக் கொள்வாயோ?”

“என்னடி ஜயா? இப்படிக் கேட்கிறாய்?”

“உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டுமென்று… கோபித்துக் கொள்வாயோ என்றுதான் பயமாக இருக்கிறது!” என்று கிட்டுவின் மீது சாய்ந்து அவன் கழுத்தில் கரங்களைச் சுற்றி, அவன் கண்களை நோக்கினாள்.

“ஜயா, சொல்கிறதைச் சொல்லேன்… நான் என்ன முரடனா?”

“கோபப்பட மாட்டீர்களே?”

“கோபப்பட மாட்டேன் என்று எத்தனை தரம் சொல்லுகிறது?” என்று அவளை முத்தமிட்டான்.

“கிட்டு… நாம் இப்படியே… பிறகு என்ன செய்வது?”

12

கிட்டு திடுக்கிட்டு விழித்தான். தான் ஒரு பெண்ணை அநியாயமாகச் சதிசெய்து வாழ்க்கையைக் குலைத்துவிட்டதாக நினைத்தான். வருங்காலம் என்பது அந்தகாரம்போல் அவன் அறிவை மறைத்தது.

“ஜயா, என்னுடன் வந்துவிடு. சமூகத்தில் இடம் இருக்காது… ஆனால்… ஜயா, என்ன செய்வது? நீ சொல் நான் கேட்கிறேன்…” என்று காதில் கேட்ட லட்சியங்களை ஒப்பித்தான்.

“கிட்டு, கோபம் வருமா நான் சொன்னால்?… நீ எங்கள் மதத்தைத் தழுவிவிடு… அப்புறம் கஷ்டமில்லை. எனக்காக நீ செய்வாயோ?” என்று அவன் மார்பில் தலையைச் சாய்த்த வண்ணம் அவன் கண்களை நோக்கினாள்.

கிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டு, “ஆ… ஆ… க…ட்டும்” என்றான். அது லேசான வழிதான். ஆனாலும் அவன் மனம் எந்தத் திக்கில் தத்தளித்தது என்று அவனுக்குத் தெரியாது. ஒரு பெண்ணைக் காப்பாற்ற எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைத்தான்.

“அப்படியானால் அப்பாவிடம் வாயேன் அநுமதி கேட்கலாம்” என்று அழைத்தாள் ஜயா.

இருவரும் சகரியாஸ் நாடாரிடம் சென்றார்கள். அவர் முதலில் திடுக்கிட்டார். ஆனால், கடைசியாகத் தம் செல்வக் குழந்தைக்கு அநுமதி தர வேண்டியிருந்தது. அதில் பிறகு அவருக்கு இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று தமக்கு ஒரு பிராம்மண மாப்பிள்ளை கிடைப்பது. இன்னொன்று தம்முடைய மகளின் கல்யாணத்தினால் அநியாயமாகச் சாத்தானின் நரக ராஜ்யத்திற்குப் போகாது, ஓர் ஆவியைக் கர்த்தரின் பரமண்டலத்திற்குச் சேர்க்க முடிந்தது என்பது. அன்று அவர் படுக்கைக்குப் போகுமுன் ஜபம் செய்யும்போது பாவியான அஞ்ஞானியின் மனத்தைக் குணப்படுத்தக் கர்த்தராகிய இயேசுவிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

பரீட்சை முடிந்ததும் கிட்டுவிற்கு ஞானஸ்நானத்துடன் திருமணத்தையும் நடத்திவிடுவது என்றும், அங்கிருந்த ரெவரண்ட் பீட்டர்ஸன் துரை உதவியால் புரோட்டஸ்டாண்ட் கல்லூரியில் ஓர் உபாத்தியாயர் உத்தியோகத்தை வாங்கிக் கொடுப்பது என்றும் பேசி முடிந்தது.

கிட்டு, தன் வாழ்க்கைப் பிரச்னைகள் இவ்வளவு எளிதாக, இனிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் இதில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. மேலும் எவ்வளவு நாஸுக்காக நாகரிகமாக இருக்கிறது என்பதில் மிகுந்த குதூகலம். இந்த இரகசியத்தை அவனுடன் பகிர்ந்துகொள்ள ஜயாவே போதும் என்று பட்டது. போகும்போதெல்லாம் காப்பி அருந்தப் பழக்கிக் கொண்டான். ஜயா சாமர்த்தியசாலியாகையாலும், கிட்டுவின் காதலுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யக்கூடியவளாகையாலும் மாமிச உணவுகளைப் பற்றி வாசனைகூடப் படாமல் ஜாக்கிரதையாக இருந்து வந்தாள்.

13

பரீட்சையும் வந்து சென்றது. அதுவரையில் தன்னுடைய இரகசியத்தைக் கிட்டு வெகு ஜாக்கிரதையுடன் காத்துவந்தான். அவனுக்குத் தன் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு இருண்டு சிதைந்து கிடக்கும் தரித்திரக் கோலம், அவனது மனசில் தாயின் மீதும் ஒரு வெறுப்பைத் தோற்றுவித்தது.

ஒரு நாள் காலையில் அவன் குளத்தைவிட்டுச் சென்றவன் திரும்பி வரவில்லை. போகும்பொழுது, “அம்மா? கொஞ்சம் தீர்த்தம் தா?” என்று வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சென்றவன் தான்.

அன்று மத்தியானம் கிட்டு, கிறிஸ்தப்பர் கிருஷ்ணமூர்த்தியாகி, ரெவரண்ட் பீட்டர்ஸனின் முன்பு, ஜயாவுக்குத் தன் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்துக்கொள்ளும் உரிமையைக் கொடுத்தான். திருமணம் மிகச் சுருக்கமாக இரண்டு மூன்று சகரியாஸ் நாடாரின் நண்பர்களுடன் நடந்தபின் தம்பதிகள் திரும்பினர்.

அன்று பாளையங்கோட்டைச் சந்தைக்குச் சென்றிருந்த சாமண்ணா இந்தச் செய்தியைத் தலைதெறிக்க ஓடிவந்து அம்பிக்கும் அவன் தாய்க்கும் அறிவித்தார். மீனாக்ஷியம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சாமண்ணாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் தொடர்ந்து தோன்றிற்று. “அம்பி, எதுக்கும் நீ போய்ப் பார்த்துவிட்டு வா!” என்று அனுப்பினாள். அவளால் அதை நம்ப முடியவில்லை. கிட்டு அப்படிச் செய்வான் என்று அவள் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றது.

அம்பியை இந்தச் செய்தி திடுக்கிடச் செய்தது. ஆனாலும் அவனுக்கு இப்படி நடக்கக்கூடும் என்று முன்பே பட்டது. முன் சம்பவங்கள், அது நடக்கக் கூடியதுதான் என்றாலும் கிட்டு அவ்வளவு அசடன் என்று அம்பி எதிர்பார்க்கவில்லை.

நேரே தான் படிக்கும் கலாசாலைக்குச் சென்று ஞானப்பிரகாசம் சாமியாரின் அறைக்குள் நேராகச் சென்றான். சாமியாருக்குக் கிட்டுவின் மீது பரமகோபம். தம் வலைக்குத் தப்பிப் புரோட்டஸ்டாண்ட் மதத்தைத் தழுவியதில் அடங்காத சீற்றம். அவரால் அதை மன்னிக்கவே முடியவில்லை. கிட்டு இப்படிச் செய்ததை விட ஹிந்து மதத்திலே ஓர் அஞ்ஞானியாகக் காலங்கழிக்க முரணி இருந்தாலும் அவருக்கு அவ்வளவு கோபம் இருந்திராது.

14

வெண்ணெய் திரண்டு வரும்பொழுது பானை உடைந்தால் சீற்றம் வருவது இயற்கைதானே? ஆனால், அதைவிடப் பன்மடங்கு சீற்றம் வெண்ணெயை மற்றவன் அடித்துக் கொண்டு போகும் ஏமாற்றத்தினால் ஏற்படும்பொழுது அது மன்னிக்கப்படவேண்டிய விஷயம். மேலும் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சாமியாரும் மனிதன் தானே? கிட்டுவின் மீது உண்டான சீற்றத்தையெல்லாம் வைத்து அம்பியைக் கண்டதும் அவன் மீது பாய்ந்தார். கிட்டு புரோட்டஸ்டாண்ட் ஆனது அம்பியின் தவறு என்று அவர் நினைப்பது போல இருந்தது.

கிட்டுவின் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் அம்பியிடம் கொட்டி, உண்மையையும் கக்கி, கடைசியாக, “அந்தச் சைத்தானின் மதத்தினனுடன் நீ ஒன்றும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று புத்தி கற்பித்து அனுப்பி வைத்தார்.

அம்பிக்கு இருந்த சிறிது சந்தேகமும் போய்விட்டது. இனிக் கிட்டுவைப் பார்த்து என்ன பயன்? வீண் மனத்தாங்கலும் கசப்புந்தான்!

நேராகத் தாயிடம் வந்து நடந்ததைக் கூறினான். “அப்படி இருக்காது; அப்படி இருக்காது” என்ற மனப்பால் குடித்துக்கொண்டிருந்தவளுக்கு நெஞ்சில் சிவதனுசைக்கொண்டு அடித்ததுபோல் இருந்தது.

உடனே ஏகமாகப் பிரலாபித்துக்கொண்டு பாளையங்கோட்டைக்குப் புறப்பட்டாள். வழிநெடுக அழுகை, பிரலாபம், பொருமல்! கிட்டு இறந்தமாதிரிதான்!

சகரியாஸ் நாடாரின் வீட்டின் முன்பு பெரிய கூட்டம் கூடிவிட்டது.

“கிட்டு! கிட்டு!” என்ற மீனாக்ஷியம்மாளின் பிரலாபம். தெய்வத்தையும் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் வைதுகொண்டு கிட்டுவை வரும்படி மன்றாடினாள். வந்தால் ஹிந்து சமூகம் சேர்த்துக் கொள்ளுமா? அதுவும் அவளுக்குத் தெரியும்; பெற்ற மனம்.

15

கிட்டுவிற்கு இது பெரிய அவமானமாக இருந்தது. தன்னுடைய புதிய மாமனாரைப் போலீசுக்கு அனுப்பிவிட்டு, வெளியே விறுவிறென்று வந்து, “வரமுடியாது! கூச்சல் போடாதே, போ”வென்று அதட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

இத்தனை நேரமும் அம்பி ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், தன் தாய்க்குப் பெரும் அவமானம் வந்துவிடக்கூடாதென்று ஒரு ஜட்காவில் அவளைத் தூக்கிப் போட்டு வண்டியை வேகமாக விடச் சொன்னான். அங்கே கூடியிருந்த கிறிஸ்தவ சகோதரர்கள், ‘ஓ’வென்று கூவிக் கேலிசெய்தார்கள்.

வண்டி நேராக அருவன்குளத்திற்குச் செல்ல முடியாது. ஆற்றிற்கு இக்கரையிலேயே வாடகையைக் கொடுத்துவிட்டு இருவரும் சென்றார்கள்.

மீனாக்ஷியின் பொருமல் அவள் துக்கத்திற்குப் போக்குவீடாக இருந்தது. அம்பியின் சாந்தமான முகம் ஹிருதயத்தில் கொட்டும் இரண்டாயிரம் தேள்களின் விஷத்தைச் சகித்துக்கொண்டிருந்தது என்பதை யாரால் உணரமுடியும்?

அவர்கள் ஊருக்குள் வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இருவரும் தனித்துச் செல்வதை அக்கிரகாரத் தெருவில் வாசற்படியில் நின்றுகொண்டு குசுகுசு என்று பேசியவண்ணம் பார்த்திருந்தனர் யாவரும்.

இருவரும் அந்த இடிந்த குச்சினுள் செல்லும் வரையில் ஒருவராவது ஏன் என்று பேசவில்லை. அம்பி உள்ளே சென்று விளக்கை ஏற்றினாள். மீனாக்ஷி ரேழியிலேயே படுத்து ஏங்கிக் கொண்டிருந்தாள்.

“ஆமாம், விளக்கு ஒன்றதான் குறை!” என்ற முனகல்.

வெளியில் யாரோ, “அம்பி! அம்பி!” என்று கூப்பிடும் சப்தம்.

வெளியே வந்தான்.

அங்கே தீக்ஷிதர் நின்று கொண்டிருந்தார். வயசு எண்பதிற்கு மேல் இருக்கும். நல்லவர். அநுபவம் உள்ளவர்.

“அம்பி!” என்று கூப்பிட்டுவிட்டுத் தயங்கினார்.

“என்ன?”

“அம்பி, நான் ஊருக்கு நல்லவன் தாப்பா. நீயும் நல்லவன். ஊரோடு ஒக்க ஓடு. மடப்பயல் கிட்டு செய்ததற்காக உங்களை விலக்கி வைத்திருக்கிறார்கள் ஊரார். என்ன செய்யலாம்? விதி! இங்கிருந்தால் பிரயோஜனம் இல்லை. விலகிண்டூட்டா ஒருவருக்கும் கஷ்டமில்லை…”

“அப்படியா!” என்றான் அம்பி. கிட்டுவின் மீது ஒரு பச்சாத்தாபம் தோன்றியது.

“அதற்கென்ன? சரிதான்” என்றான் மறுபடியும்.

ஆமாம் பழைய, ஓநாயும் ஆட்டுக் குட்டியும் கதைதான். அதற்கு என்ன?

16

கிட்டு அந்த ஆவேசத்தில் உள்ளே சென்றவன் ஒருவருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான். அவன் மனசில் பேய்கள் சுதந்தர நடனம் புரிந்தன. மனம் குழம்பியது. இருள்!

ஒரு பக்கம் தாய்; மறுபக்கம் ஜயா!

ஜயா, கிறிஸ்தவ மதத்தினளானாலும் ஒரு பெண். தன்னுடைய கணவனின் கஷ்டத்தை அறிந்து கொண்டாள். தனது பணிவிடைதான் அவனுக்குச் சாந்தி தரும் என்று தெரிந்து கொண்டாள்.

மெதுவாகப் பின்புறம் வந்து நின்றான்.

கிட்டுவின் கழுத்தில் அவள் கரங்கள் சுருண்டன.

“கிட்டு!”

அவள் கண்களிலிருந்து முத்துக்கள் உதிர்ந்தனபோல் அவன் நெற்றியை இரண்டு துளிகள் நனைத்தன.

“ஜயா!” ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

அவனுடைய தலையைத் தன் மார்பில் ஆதரவுடன் அணைத்தாள்.

அன்று நெடுநேரம் அந்த அறை மௌனமாக இருந்தது.

சாந்தி பிறக்கவில்லை!

17

ஜயாவிற்குப் பயத்தில் பிறந்த ஒரு யோசனை தோன்றியது. அவனுக்கும் மாமிச உணவு பழக்கிவிட்டால் இனித் தாயை நோக்கிக் கிட்டுவின் மனம் செல்லாது என்ற நினைத்தாள்.

உடனே கீழே சென்று கறிவடையை ஒரு தட்டில் எடுத்து வந்து அவன் முன்பு வைத்தாள். இதுவரையில் அவன் மனம் கோணாது இருக்கச் சபதம் செய்தவள் அன்று அவன் பக்கலில் உட்கார்ந்து ஒன்றை எடுத்து அவன் வாயில் ஊட்டினாள்.

கிட்டு ஏதோ யந்திரம் மாதிரிக் கடித்தான். வடை மாதிரித் தெரியவில்லை. நடுவில் ஏதோ கடிபடாமல் ஜவ்வுப்போல் தட்டுப் பட்டது.

“இது என்ன ஜயா?” என்றான்.

ஒரு புன்சிரிப்புடன் தன்னுடைய வாயில் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டு இரகசியமாக அவள், “கறிவடை?” என்றாள்.

“ஜயா! உன் காதல் எனக்குப் போதாதா! நான் ரப்பரையுமா தின்ன வேண்டும்?” என்று பரிதாபகரமாகச் சிரித்தான்.

சட்டென்று அவன் முகம் மாறியது. வடைகளை அப்படியே சிதறிவிட்டு, “போ! போ!” என்று இரைந்தான்.

ஜயாவிற்கு நெஞ்சில் வாள்கொண்டு குத்திய மாதிரி இருந்தது. அவனுடைய நிலையைக் கண்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் அன்று இரவு தலைவிரி கோலமாகத் தலை வாயிற்படியில் படுத்துக் கிடந்தது அவனுக்குத் தெரியாது; வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாது. அன்றிலிருந்து அவளும் மாமிச உணவு தொடுவதில்லை.

18

அம்பியும், மீனாக்ஷியம்மாளும் உயிர் வாழவேண்டி ஆசைப்பட்டால் கிராமத்தைவிட்டு விலக வேண்டியதுதான். அவர்கள் அதை விட்டுப் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்குமுன் நரகம் எப்படி இருக்கும் என்பதைச் சிறிது அறிந்தார்கள்.

அம்பி, கைலாசபுரத்தில் இரண்டு ரூபாய்க்குள் ஒரு குடிசை வாடகைக்கு எடுத்தான். அங்கிருந்து வரும்பொழுது வீட்டையும் அநாவசியச் சாமான்களையும் விற்றுவிட்டதனால் சிறிதே கையில் பணம் இருந்தது.

வேளாளத் தெருவில் இருந்துகொண்டு, மீனாக்ஷியம்மாள் முறுக்கு, அப்பளம் விற்றுக் காலட்சேபம் செய்ய முயலுவதென்றும் அதற்குள் அம்பி ஒரு வேலை தேடிக்கொள்வதென்றும் ஏற்பாடு.

வேலை என்ன மரத்தில் காய்த்துத் தொங்குகிறதா? ஏக்கத்தினால் நாளுக்கு நாள் மெலிந்து வந்த மீனாக்ஷியம்மாளுக்கு முன்போல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதற்குள் நாலைந்து மாசங்கள் சென்றன; கையில் இருந்த பணமும் செலவாகி விட்டன. அம்பியும் தேடாத இடத்தில் எல்லாம் தேடுகிறான். வேலைக்கு என்ன செய்வது?

அன்று மத்தியான்னம் வெயிலில் அலைந்துவிட்டுச் சோர்ந்து வீட்டிற்குள் வந்தான். அன்று காலையிலிருந்து பட்டினி. மீனாக்ஷி அப்போது படுத்த படுக்கையாகக் கிடந்தாள். மருந்திற்கு என்ன செய்வது? அது இப்போது எங்கிருந்து கிடைக்கும்?

19

தபாற்காரன், “ஸார்! ராமசாமி. மணியார்டர் ஸார்?” என்றான்.

அம்பிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு யார் மணியார்டர் அனுப்பப் போகிறார்கள்? ஒரு வேளை தவறான விலாசமாக இருக்கலாம்.

அப்படி ஒன்றும் இல்லை. கிட்டுவிடமிருந்து வந்திருக்கிறது. அவனுக்கு அடங்காத கோபம்! எதனாலோ?

தபாற்காரனை அதைத் திருப்பி அனுப்புமாறு சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு கார்டில் பின்வருமாறு எழுதினான்.

ஸ்ரீ கிறிஸ்தப்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு. தங்கள் மணியார்டர் எங்களுக்கு அநாவசியம். இரத்தத்தையும் வாழ்நாட்களையும் தியாகம் செய்தவருக்குப் பதில் உபகாரமாக, அவள் சுகமாக ஒரு கணமாவது இருக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல், பொறுப்பை உதறித் தள்ளின ஒருவருடைய போலி அன்பு அல்லது பச்சாத்தாபம் அவளுக்கு வேண்டாம். இனியாவது தயவுசெய்து எங்களைப் புண்படுத்தாதிருந்தால் போதும். மடிந்தாலும் ஹிந்து தர்மத்திற்காக மடிவோம்! இனியாவது அந்த அன்பு மட்டிலும் இருந்தால் போதும்.

இப்படிக்கு,
ராமசாமி.

இந்தக் கார்டு கிட்டுவின் ஹிருதயத்தைப் பிளந்தது. இருளில் முட்டிக்கொள்ளும் போது நட்சத்திரம் கிடைத்தாலும் புழுதியில் தானே புரள வேண்டும்?

ஜயாவைப் போல் ஒரு சகதர்மிணி அகப்படாள் என்பதும் உண்மையே! வாழ்க்கையின் லக்ஷ்யம் அதனோடு முடிவடைந்துவிடுகிறதா? கிறிஸ்தவ மதம், ‘நான் சொல்வதை நம்பு; நீயாக ஆலோசிக்க உனக்கு அநுமதி இல்லை’ என்கிறது. ஹிந்து மதம், ‘நீ என்ன வேண்டுமானாலும் எண்ணு; ஆனால் சமூகக் கட்டுப்பாடு என்ற வேலியைத் தாண்டாதே!’ என்கிறது. இவற்றில் எது பெரியது?

எப்படியாவது தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை! ஆனால் அம்பியின் கோபத்திற்குப் பயம். ஜயா! அவள் அவன் தான்! இவன் நினைத்ததெல்லாம் அவளுக்குச் சரி.

20

நாட்கள் கழிந்தன.

அம்பிக்குப் பெட்ரோல் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை.

மீனாக்ஷியம்மாளுக்குப் படுக்கை நிரந்தரம்; கிட்டுவின் நினைவு நிரந்தரம்.

அன்று சாய்ந்தரம் மீனாக்ஷியம்மாளின் நினைவு தடுமாறியது.

ஏதோ, தற்செயலாகக் கிட்டுவும் துணிந்து தன் மனைவியுடன் வந்தான்.

உள்ளே ஜயாவை அழைத்துச் செல்வதற்குப் பயம். அதற்குள் ஜயா முந்திக்கொண்டாள். “நான் வெளியில் நிற்கிறேன்; பார்த்துவிட்டு வாருங்கள்” என்றாள்.

கிட்டு உள்ளே சென்றதும் திடுக்கிட்டான். தாயின் சாயைதான் படுக்கையில் கிடந்தது.

அம்பி ஒன்றும் பேசவில்லை.

சற்று நேரம் பொறுத்து, “இதுதான் உன் வேலை, பார்த்தாயா?” என்றான்.

கிட்டுவிற்குக் கோபம் வந்தது.

“நான் எனது லக்ஷியத்தை அடைந்தேன். அதற்கு யார் தடை?” என்றான்.

“ஒரு பெண்ணுக்காக அசட்டுத்தனமான மதந்தான் உனது லக்ஷியமோ? தனது தர்மத்தைப் பற்றிக் கேட்டாவது இருக்க வேண்டும். லக்ஷியம் என்ன குட்டிச்சுவர்?” என்றான் அம்பி.

இருவருக்கும் வாக்குவாதம் வலுத்துவிட்டது.

மீனாக்ஷியம்மாள் விழித்தாள்.

“தெய்வமே! நீ இருக்கிறாயா? என் இரத்தம், என் குழந்தைகள்! இவைகள் இரண்டிற்கும் இப்படிச் சண்டையை உண்டுபண்ணிவிட்டதே, தர்மமா? அது நிஜந்தானா!” என்று பரபரப்புடன் எழுந்து உட்கார்ந்து பேசினாள். முகத்தில் தேஜஸ் இருந்தது; புதிய சக்தி இருந்தது. சொன்னவுடன் களைப்படைந்து சாய்ந்தாள்.

வெளியே எங்கோ ஒரு மாடு கன்றை நோக்கி, “அம்மா!” என்று கதறியது. மீனாக்ஷியம்மாள் ஆவியும் எந்தத் தாயையோ நோக்கி விடுதலை பெற்றது.

“போ! வெளியே!” என்றான் அம்பி.

“என் தாய்!” என்றான் கிட்டு.

அப்போது ஜயா உள்ளே தைரியமாக நுழைந்தாள்.

“இந்த இடத்திலா சண்டை? நீங்கள் ஆண் பிள்ளைகளா?” என்றாள்.

ஓடிச்சென்று மீனாக்ஷியம்மாளை மடிமீது எடுத்துக் கிடத்திக் கொண்டு கதறினாள்.

கிட்டுவைக் கொடுத்த புனிதமான சரீரம் அல்லவா?

அம்பிக்கு என்ன? அவன் தைரியசாலி; அறிவின் தராசு.

இவள் செய்கை இருவர் மனசிலும் ஒரு சாந்தியைத் தந்தது.

அவள் பெண். உணர்ச்சிவசப்பட்டவள். மதம் அவளுக்குத் தெரியாது. அம்பிக்கு அவள் செய்கை அவன்முன் அவளைப் பெரிய புனிதவதியாக்கியது.

மெதுவாகச் சரீரத்தைக் கிடத்திவிட்டு, கிட்டுவின் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, “போய் வருகிறோம்” என்றாள்.

“நீ ஒரு ஹிந்துப் பெண்” என்றான் அம்பி.

“நான் கிட்டுவின் மனைவி” என்றாள் ஜயா.

“கிட்டு…” என்று என்னவோ சொல்ல வாயெடுத்தான் அம்பி. அதற்குள் இருவரும் சென்றுவிட்டார்கள்.

அம்பி அந்த அறையில் இருந்து, அந்தப் புனிதவதியான தாயின் சரீரத்திற்குச் சாந்தியைக் கொடுக்க மனித உலகால் முடியாது போனதைப் பற்றிக் குமுறினான்.

அதற்கென்ன செய்யலாம்? அதுதான் வாழ்க்கை!

(முற்றும்)

தினமணி, பாரதிமலர் – 1935

License

புதிய கூண்டு Copyright © by manarkeni. All Rights Reserved.