="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

64 துன்பக் கேணி

துன்பக் கேணி

1

வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்குத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின் மதிப்பிற்குக் கூடக் குறைந்த ஒரு சிறு கிராமம். ஊரைச் சுற்றிலும் பனை. பெட்ரோல் நாகரிகத்தின் ஏகாதிபத்தியம் செல்லும் ஜில்லா போர்ட் ரஸ்தாகூட, அது தன் மதிப்பிற்குக் குறைந்தது என்று நினைத்துக் கொண்டு, ஊரைவிட்டு விலகி 1/2 மைலுக்கு அப்பாலேயே செல்லுகிறது. ரஸ்தாவைவிட்டு இறங்கிக் கிழக்குப் பக்கமாக ஒரு மைல் சுமாருக்கு உடைமுள்ளும் சோற்றுக் கத்தாழையும் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருக்கும் வண்டித் தடத்தில் சென்றால் ஒரு பனங்காட்டில் கொண்டுவிடும். அந்தக் காட்டில் தான்தோன்றியாகச் சென்று கொண்டிருக்கும் எந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றாலும் வாசவன்பட்டி எல்லைக்கு வந்துவிடலாம்.

ஊர் ஆரம்பித்துவிட்டது என்ற குறிப்பு என்னவெனில், பனங்காடு முடிந்து மறுபடியும் அந்த வண்டித்தடம் இரண்டு குட்டிச்சுவர்களுக்கிடையில் அற்புதமாகத் தோன்றுவதுதான். அவ்விரண்டு குட்டிச்சுவர்களும் எதிர்எதிராக இரண்டு ‘நந்தவனத்தை’ச் சுற்றி வருகின்றன. தங்க அரளியும், செவ்வரளியும், முல்லையும் தறிகெட்டு வளர்ந்திருக்கும் ஒரு பிரையிடம். ‘நந்தவனம்’ ஒவ்வொன்றிலும் ஒரு கிணறு உண்டு.

இதைக் கடந்துவிட்டால் கிழக்கே பார்த்த கோவில், மிகவும் பாழடைந்து, மதில்கள் இடிந்து, மொட்டைக் கோபுர அலங்காரத்துடன் காணப்படும். அந்தக் கோவிலின் அர்ச்சகர் வீடு ஒன்றையும் இரண்டு மூன்று இடிந்து கூரை விழுந்த வீடுகளையுமுடைய தெருத்தான் அக்ரகாரம். அது இருபது அடிக்கப்புறம் மறுபடியும் திரும்பி, கத்தாழைச் செடி பூவரச மரங்களுக்கிடையில் சென்று, பிள்ளைமார் வீதியாக மாறுகிறது. தட்டோ டு போட்டு நாழி ஓடுகளால் சாய்ப்பு இறக்கிய பெரிய வீடுதான் பண்ணையார் நல்லகுற்றாலம் பிள்ளையின் வீடு. அதைத் தொடர்ந்த இரண்டு மூன்று வளைவுகளில் கணக்கு முதலியார், கி.மு. சங்கரலிங்கம் பிள்ளை, பலசரக்குக் கடை ஓட்டப்பிடாரம் பிள்ளை – ஓட்டப்பிடாரம் என்ற ஊர் அவரது பூர்விகம் – வாத்தியார் சுப்புப் பிள்ளை, பிள்ளையார் கோவில் பூசாரி வேணுவலிங்கப் பண்டாரம் – இவர்கள் எல்லோரும் வசிக்கும் குடிசைகள். குடிசைகளைப் பார்த்தாலே, அவர்கள் பண்ணைப் பிள்ளையைப் போல் வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெற்றவர்கள் அல்லர் என்று தெரிந்துவிடும். எல்லாரும் பண்ணைப் பிள்ளையவர்களின் வயல்களை, வாரமாகவோ குத்தகையாகவோ எடுத்துப் பயிர் செய்து ஜீவிப்பவர்கள். வேளாளர் எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்றுதான். கமறும் தேங்காயெண்ணெய் வாசனை பரிமளிக்கும் இந்தத் தெருவைத் தாண்டினால் ஊர்ப் பொட்டல். அதில் தனிக்காட்டு ராஜாவாக, தேஜோமயானந்தமாக, ஊர்க்காவல் தெய்வமாகிய சுடலைமாடப் பெருமானின் பீடம் நெடுமரம் போல் காறைக் கட்டியினால் உறுதியாகக் கட்டப்பட்டு நிற்கும். இடிந்து விழுந்த கோவிலில் மூர்த்தீகரமாக எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணுவை விட இவருக்கு ஊர் மக்களிடையில் அதிக மதிப்பு உண்டு. அது அந்தச் சுடலைமாடனுக்குத் தெரியுமோ என்னவோ! அதைச் சுற்றி ஐந்தாறு மறவர் குடிசைகள், இவற்றில் ஊர்த் தலையாரி முதலியோர் வசிப்பார்கள். குடிசைகளைத் தாண்டிச் சென்றால் மானாவாரிக் குளம் – அதாவது தண்ணீருக்கு வானம் பார்க்கும் ஏரி. அதன் இக்கரையின் வலப்புறத்தில் பறைச்சேரி; அங்கு ஒரு முப்பது குடிசைகள்.

வேளாளர் தெருவில், ஊர்ப் பொட்டலை அணுகினாற் போல் பண்ணைப் பிள்ளையவர்கள் கட்டிய சவுக்கை, ஓலைக்கூரை வேய்ந்த திண்ணை, ஒட்டப்பிடாரம் பிள்ளையின் பலசரக்குக் கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கும். ஊர்ப்பேச்சு, ஊர்வம்பு, கி.மு.வின் அரசாங்க நிர்வாகம், சீட்டாட்டம் எல்லாம் அங்குதான். சவுக்கையில் வேனிற்காலங்களில் இரவில் ஆட்கள் படுப்பதற்கும், பகலில் ‘பெரிய மனிதர்’ சாய்ந்திருந்து போவதற்கும் கோரைப் பாய், அழுக்குத் தலையணை, திண்டு முதலியவை மூலைக்கு ஒன்றாகக் கிடக்கும். ஓட்டப்பிடாரம் பிள்ளையின் கடையில் ரூலர் சிகரெட் முதல் பின்னை எண்ணெய் வரை வாங்கிக் கொள்ளலாம். மகா சிவராத்திரி, சுடலைமாடனுக்குக் கொடை முதலிய காலங்களில் அவர் சீட்டுக்கட்டுகளும் விற்பார். ஓட்டப்பிடாரம் பிள்ளை பலசரக்குகளில் மட்டும் வியாபாரம் செய்பவர் அல்லர். குழிப்பெருக்கம், அரிவரி முதலிய ஆரம்பக் கல்வி விஷயங்களிலும் பண்டமாற்று வியாபாரம் நடத்துபவர். உற்சாகம் வந்துவிட்டால் கடை முன்பு கூடியிருக்கும் தேவமார்களுக்கு ‘மருதை வீரன்’ கதை, அல்லியரசாணி மாலை முதலியவற்றை வாசித்துக் காலட்சேபம் செய்வார். சவுக்கையில் சுவாரஸ்யமான பேச்சுக்கள் அடிபட்டால் அவர் கடையிலிருந்து கொண்டே கூட்டத்தில் தம்முடைய பங்கையும் சேர்த்துவிடுவார்.

கோடைக்காலம் ஆரம்பமாகி அறுப்பும் தொடங்கிவிட்டது. அறுப்புத் தொடங்கிவிட்டது என்றால் ஓட்டப்பிடாரம் பிள்ளைக்கும் அதைவிட, சேரியின் பக்கத்தில் கள்ளுக்கடை வைத்திருக்கும் இசக்கி நாடாருக்கும் கொள்ளை. சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை பிள்ளையவர்களின் கடை முன்பு சந்தை இரைச்சலாக இருக்கும்.

வாசவன்பட்டியில் அறுப்பு ஆரம்பித்துவிட்டது. சாயங்காலம் பொழுது சாய்கிற சமயம். கணக்குப் பிள்ளையும், கி.மு.வும் சவுக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கி.மு. வரி வசூலிப்பதிலும் மும்முரம். அவர் முன்பு அரசாங்கப் பழுப்புக் காகித நோட்டு புத்தகங்கள், நீளமான பை – இத்யாதி கிடக்கின்றன. பக்கத்தில் சவுக்கையின் ஓரத்தில் தலையாரி கட்டையத் தேவன் நின்று கொண்டிருக்கிறான்.

“கட்டையா, கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்தா! ஆமாம், பாக்கும் இல்லே போலிருக்கு; எல்லாமா ஒரு துட்டுக்கு வாங்கியா!” என்றார் கணக்குத் தீத்தாரப்ப முதலியார்.

“ஆமாம், அவுக கேக்கதை வாங்கியாந்திட்டு, வெள்ளையனைப் பாத்து இளுத்தா! அவன் எப்பப் பார்த்தாலும் இப்படித்தான். நாளெவிடியன்னைக்கிக் கச்சேரிக்குப் போகணும், யாவுகம் இருக்கா?” என்று சொல்லிக்கொண்டே குறிப்பிலிருந்தவற்றைத் தாக்கல் பண்ணிக்கொண்டிருந்தார் கி.மு.பிள்ளை.

அப்பொழுது, மேலெல்லாம் பயிரின் புழுதி படிந்து, கக்கத்தில் ஒரு குடையை இடுக்கியவண்ணம், பின்புறம் இரண்டு மூன்று மறவர்கள் கைகட்டி அவருடைய பேச்சைக் கேட்டுவர, வியர்த்து விறுவிறுத்துக் கொண்டு, பண்ணையப் பிள்ளை வந்து, “அப்பாடா!” என்றவண்ணம் சவுக்கையில் உட்கார்ந்தார்.

“வாருங்க அண்ணாச்சி! மேனி எப்படிக் கண்டது!” என்றார் கி.மு.

“மேனியாவது, எளவாவது! சவத்தைத் தள்ளுங்க. ஏலே ஆண்டி, வீட்டுக்கு என்ன வேணுமென்று பாத்துவிட்டு வா!” என்று ஒருவனை அனுப்பினார்.

“என்ன அண்ணாச்சி, ஆலடியிலே அறுப்பெத் தொடங்கிட்டிய போல இருக்கெ – இரு சவமே, அண்ணாச்சி கிட்ட பேசுதது தெரியல்லே – வர வர பறக் களுதைகளுக்கும் திமிறு ஏறுது!” என்று எதிரில் இருந்த பறைச் சிறுமியை அதட்டிக் கொண்டு, பண்ணையாரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் ஓட்டப்பிடாரம் பிள்ளை.

“ஆமாம், ஒண்ணுக்கும் குறைவில்லை, எல்லாம் ஒரு தொல்லைதான். போன திங்கக் கெளமை கோடு (கோர்ட்டு)க்குப் போயிருந்தேன். கப்பலரிசி வந்து மூட்டை மூட்டையாகக் குவியுதாம். பேட்டைப் பிள்ளை சொன்னார். இங்கையா, மண்ணோடு முட்டினாலும் ஒண்ணுமில்லை. அங்கெ நிக்கது மருதியா – ஏ மூதி! தொளுவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்துப் போட்டுவிட்டு வா!” என்று அதிகாரம் பண்ணிவிட்டு, “பிள்ளைவாள், ஆண்டி வந்தானா நந்தவனத்துக்கு வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்” என்று குறுக்குப் பாதையாக அங்கு சென்றார்.

“ஏட்டி, ஒம் புருசன் என்னமோ பணங் குடுக்கணும் என்று சொல்லுதாகளே, அதுக்குப் பண்ணையாரு கோவிச்சாகளாக்கும்; இருந்தாலும் ஊரு பெரியவுகளை பகைச்சுக் கிடலாமாட்டி!” என்று மருதியிடம் பேச்சுக் கொடுத்தார் கடைக்காரர்.

“என்ன சாமி, எம் பள்ளன் பண்ணை யெசெமாங்கிட்டெ என்னமோ ஒரு ரெண்டு நூறு வாங்கிருக்காஞ் சாமி. ஊருக்குப் பெரிய நாயம்மாரே இப்படிப் படுத்துனா, நாங்க என்ன செய்வோஞ் சாமி? அதுலெ ரெண்டு காளையும் வண்டியும் வாங்கினா, இப்பொ அதுவும் – அந்தச் சொடலைதான் பாக்கணும்! – இவிய இப்படி உறுக்கினா, பணத்துக்கு எங்கே போக? சாமி, இம்பிட்டு கருப்பட்டிப் போயிலையும் சருகும் குடுங்க சாமி, தொளுவெப் பாத்துக்கிட்டு வாரேன்!” என்று அவளுக்குத் தெரிந்ததைப் புலம்பிக்கொண்டு மாட்டுத் தொழுவத்தின் பக்கம் சென்றாள் மருதி.

2

மருதியின் புருஷன் பண்ணைப் பிள்ளையிடம் கடன் வாங்கும்பொழுது, ‘நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவோம்’ என்ற நம்பிக்கையிருந்துதான் வாங்கினான் என்று நினைக்க முடியாது. கொஞ்ச நாட்கள் மாட்டை உபயோகித்துக்கொண்டு, அது நோஞ்சானாகும் சமயத்தில் பண்ணை எஜமானின் காலைப் பிடித்துப் பணமாகக் கடனைக் கொடுக்காமலிருந்து விடலாம் என்ற யோசனையின் பேரில்தான் நடத்தியிருக்கவேண்டும். பண்ணை எஜமான் இவனுடைய கூழைக் கும்பிடுகளுக்கெல்லாம் மசிகிற பேர்வழியாகக் காணப்படவில்லை. மேலும் அவர்தான் என்ன செய்வார்? எங்கு பார்த்தாலும் பணமுடை; தீர்வைக்குக் கூடக் கட்டி வராது போலிருக்கிறது. நிலத்தில் ஜெண்டாவை நட்டுவிடாமலிருக்க, மசிகிற பேர்வழிகளிடத்தில் சிறிது (அரசாங்கத்தின் பயத்தினால் ஏற்பட்ட) முரட்டுத் தனத்தோடு நடந்துகொண்டார். காளைகள் அவர் வசமாயின. அவ்வளவுதான் மிச்சம். ஊர்ப் பறைச்சேரியில் ஏக களேபரம். வெள்ளையனும் அவன் பெண்டாட்டியும் குய்யோமுறையோவென்று கத்தினார்கள். வெள்ளையன் கொஞ்சம் முரண்டினான்; உதை கிடைத்தது.

பண்ணையார், ‘பறச் சனமோ குறச் சனமோ!’ என்று வெறுத்துக் கொண்டார். என்ன செய்தாலும் நன்றியில்லை என்ற மனக் கசப்பு.

வெள்ளையன் அன்று இரவு வெகு நேரம்வரை வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் விடியற்காலமாகப் பண்ணைப் பிள்ளையவர்கள் வெளியில் செல்லுமுன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பார்த்து விட்டுப் போகலாமே என்று உள்ளே நுழைந்தார். வெள்ளையனின் நோஞ்சான் காளைகள்தான் அசைபோட்டுக் கொண்டு ஆள் அரவத்தைக் கேட்டு எழுந்திருந்தான். மயிலைக் காளைகள் இரண்டையும் காணவில்லை. உடனே, கி.மு. பிள்ளையை எழுப்பிக் காண்பித்துவிட்டு, சவுக்கையின் பக்கத்தில் கிடந்த தலையாரித் தேவனை எழுப்பிச் சமாசாரம் சொன்னார்கள்.

தலையாரித் தேவனுக்கு வெள்ளையன்மீது சந்தேகம். உடனே அவன் வீட்டிற்குச் சென்று பார்க்க, மருதி மட்டுமே அங்கிருந்தாள். புருஷன் எங்கே என்று மூவரும் நின்று விசாரிப்பதைப் பார்த்து, உள்ளுக்குள் பயந்துகொண்டு, தன் புருஷன் அவ்வளவு நேரம் வீட்டிலிருந்துவிட்டு அப்பொழுதுதான் வெளியே போனான் என்று ஒரு பொய் சொன்னாள்.

அவள் சொல்வது நிஜமா பொய்யா என்பதைத் தீர்மானிப்பதற்குத் தலையாரித் தேவனுக்கு ஒரே வழிதான் தெரியும். உடனே தலை மயிரைப் பிடித்திழுத்து, அவளைக் கீழே, தள்ளி, உதைக்க ஆரம்பித்தான். தேவனுக்கு மருதியை உதைப்பதில் ஒரு குஷி.

அவள் குய்யோமுறையோவென்று கத்தினாலும் தலையாரித்தேவனின் ஜம்பம் சாயவில்லை. அதற்குள் சேரி திரண்டது. களவு விவரமும் பரவியது. வெள்ளையனை இரவு வெகு நேரம் வரை கள்ளுக்கடையில் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள்.

பிறகு என்ன? மருதி எவ்வளவு கூச்சல் போட்டும் பயனில்லை. வெள்ளையன் பனங்காட்டில் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்ததைக் கண்டுகொண்டார்கள். ஆள் விடப்பட்டவுடன், அவன் உண்மையில் திருடாமல் இருந்தாலும் என்ன? விஷயம் வெகு எளிதில் போலீஸ் கேசாக மாறி, வெள்ளையன் சிறைக்குச் சென்றான்.

அவன் சிறை செல்லுமட்டும் ஊர் அல்லோலகல்லோலம்தான். முடிவில்லாமல், சளைக்காமல், பேசுவதற்குச் சமாசாரங்கள் நிறைந்திருந்தன. பண்ணைப் பிள்ளையவர்கள் என்ன முட்டிக்கொண்டும் மாடுகள் வந்தபாடில்லை. அதற்காக வெள்ளையன் பயலைச் சும்மா விடுகிறதா? ஏமாற்றிய பணத்திற்காவது அங்கு போய்விட்டு வரட்டுமே என்பதுதான் அவருடைய வாதம்.

இந்தக் களேபரக் காலத்தில் மருதிக்கு இரண்டு மாதம், அவளைப் பொறுத்தவரை, சேரியில் கிடைக்கும் சௌகரியங்களுக்குத் தகுந்தவாறு, வெள்ளையனுடன் ‘கண்ணாலம்’ செய்து கொள்ளும்பொழுது வாழ்க்கை இன்பகரமாகத்தான் ஆரம்பித்தது. புது மாப்பிள்ளை என்ற உற்சாகத்தில் அவன் வண்டியும் மாடும் வாங்கி இக்கோலமாகும் என்றிருந்தால் அவள் என்ன செய்ய முடியும்? வெள்ளையன் மீது அவளுக்கு அளவுகடந்த பிரியந்தான். இருவரும் கள்ளைக் குடித்துவிட்டு அடிக்கடி சச்சரவிட்டுக் கொண்டாலும் சேரியின் திருஷ்டி தோஷத்தைப் பெற்றிருப்பார்கள். எப்படியோ வெள்ளையன் சிறை சென்றான். மருதி அப்பன் வீடு சென்றாள். பிள்ளையவர்களுக்கு ஏச்சும் இரைச்சலுந்தான் மிச்சம். ஆனால், வெள்ளையன் சிறைக்குப் போனதில் பணத்திற்குப் பதிலாக ஒரு திருப்தி.

எங்கு பார்த்தாலும் பணமுடையாகவும் நிலங்கள் தீய்த்து போயும் இருக்கும் காலத்தில், அப்பன் வீடானாலும், அன்பையும் ஆதரவையும் தவிர வேறு என்ன கிடைக்கப் போகிறது. அதிலும் ஏழைப் பறையனாக இருக்கும்பொழுது? அந்தச் சமயம் பார்த்துச் சாலைக்குக் கப்பி போட ஆரம்பித்தார்கள். மருதிக்கும் அவள் பெற்றோருக்கும் சிறிது வேலை கிடைத்தது. இரண்டு மூன்று மாதம் கையில் காசு ஓட்டம். வீட்டிலே, புருஷன் அநியாயமாகச் சிறை சென்றான் என்பதைத் தவிர வேறு ஒரு கவலையும் இல்லாமல் இருந்தது.

எப்பொழுதும் சாலையில் கப்பி போட்டுக்கொண்டேயிருக்க ஜில்லா போர்டிற்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? மறுபடியும் கஷ்ட சக்ரம் அவர்கள் மீது சுழல ஆரம்பித்தது.

அப்பொழுது தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைச்சேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! அதற்காகத் திரைகடலோடிச் சுதந்திரத்தைப் பணையம் வைத்தால் என்ன? கடைசியிலாவது ஏதாவது மொத்தமாகக் கொண்டுவரலாமே!

மருதியும் அவளுடைய தாயாரும் கங்காணியுடன் கொழும்புக்குப் புறப்பட்டார்கள்.

3

விஸ்வாமித்திரரும் வியாசரும் மலைக்குச் செல்வதற்குக் காரணம் ஒன்று; மிஸ்டர் ஸ்டோ டார்ட், ஐ.ஸி.எஸ்., மலைக்குச் செல்வதற்குக் காரணம் வேறு; ஸ்ரீமதி மருதியம்மாள் மலைக்குச் செல்வதென்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ரிஷிகளின் பூர்வாசிரமத்தைப் பற்றி ஆராய்வது நாஸுக்கில்லை என்று கூறுவார்கள். மருதியம்மாளின் மலைவாசத்தைப் பற்றியும் அப்படித்தான்.

‘வாட்டர் பால்ஸ்’ என்பது தேயிலைத் தோட்டத்திற்காகவே தெய்வத்தினால் இலங்கையில் சிருஷ்டிக்கப்பட்ட இடம் என்பது கிரௌன் தேயிலைத் தோட்டத்தின் தற்போதைய முதலாளியான ஸர் ஜோஸப் பிட்ஜ்மார்ட்டின் கிரௌனின் திட்டமான, அபிப்பிராயம். இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால், ஸர் ஜோஸப் சீமையை விட்டுச் சிறிதாவது விலகியதே கிடையாது. இங்கிலீஷ் ‘பீப்’பும் (மாட்டுக்கறி), இங்கிலீஷ் ‘பேக்க’னும் (பன்றி இறைச்சி) அவர் சொந்தப் பார்வையிலேயே தயாரிக்கப்படாத தேசம் அவர் தேகத்திற்கு ஒத்து வராது என்று அவருடைய ஹார்லி தெரு (லண்டனில் பிரபல வைத்தியர்கள் வசிக்குமிடம்) குடும்ப வைத்திய நிபுணர் அவருக்குக் கூறியிருக்கிறாராம். அதற்காக, மலேரியாவிற்கும் சூரிய உஷ்ணத்திற்கும் வருஷம் 2000 பவுனுக்கு ஈடு கொடுப்பதாக ஒப்புக் கொள்ளும் நபர்களிடம் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அவர் விட்டு விடுவது வழக்கம்.

தற்பொழுது பாட்ரிக்ஸன் ஸ்மித் என்றவர் ‘வாட்டர் பால்’ஸில் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் 45 வயதுப் பிரம்மசாரி. அவருக்கு இரண்டு விஷயங்கள் சந்தேகமில்லாமல் தெரியும். ஒன்று, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மசாரியாக இருப்பது என்பதன் அர்த்தம்; இரண்டாவது, தேயிலை உற்பத்தியில் கறுப்பு மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாகக் கறுப்புக் கூலிகளின் பாஷையும் நன்றாகத் தெரியும்.

கறுப்பு மனிதர்கள் ‘வாட்டர் பால்ஸ்’ என்ற இடத்தை ‘வாட்டர் பாலம்’ என்று கூறுவார்கள். இலங்கைக் குன்றுகளின் சரிவில் ஒரு நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அந்த மலைச்சரிவில், இரண்டு மைல் நீளமும் மூன்று மைல் அகலமுமுள்ள தேயிலைக் காடு நீர்வீழ்ச்சியின் இருபக்கத்திலும் உள்ளது. துரையவர்களின் பங்களா, நீர் வீழ்ச்சிக்கு மேலே ஒரு பாதையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரே, அந்தப் பெயரற்ற காட்டாற்றின் மறுபக்கத்தில், கூலிகளின் காறைக் குடிசைகள் – கோழிக்கூடுகள் மாதிரி. அதற்கும் தள்ளி ஒரு ஆஸ்பத்திரி, மற்ற கறுப்பு அதிகாரிகள் இருக்கும் இடங்கள். அதிகாரிகளோ, தோலைத் தவிர மற்ற எல்லா அம்சத்திலும் துரைகளின் மனப்போக்கையுடையவர்கள். அங்கு போய்க் குடியிருந்தால் இரண்டு விதமான மனப்பான்மைதான் ஏற்படும். ஒன்று அங்கிருக்கும் கறுப்புத் துரைகளுடையது. இரண்டாவது சிறைக்குத் தயாராக்குவது, மூன்றாவதும் ஒன்றிருக்கிறது. அதுதான் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி போடுவது.

தட்டப்பாரையில் தங்கி, பிறகு கப்பலேறி மலைக்கு வருமட்டும் மருதிக்கும் அவள் தாயாருக்கும் என்னவோ பெரிய புதையல் எடுக்கப் போவதாக உற்சாகம். ‘வாட்டர் பால’த்திற்கு வந்தவுடன் அதன் சீதளமான பருவமும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த காறைக் குடிசையும் கவர்ச்சித்தன. தேயிலை பறிக்கும்பொழுது குடையாகத் தலையில் போட்டுக் கொள்ளவும் கம்பளி. வாரத்திற்கு வாரம் கைமேல் காசு! எல்லாம் வெகு சௌகரியமாக இருந்தன. அங்கிருக்கும் நாற்றம் வாசவன்பட்டிச் சேரியின் நாற்றத்தைவிடச் சிறிது அதிகம். அதுவும் சில நாட்களில் பழகிப் போய்விட்டது. குளிரின் கடுமையால் காலை 7 மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். பிறகு கஞ்சியைக் காய்ச்சிக் குடித்துவிட்டு, முதுகில் ஒரு கூடையைப் போட்டுக் கொண்டு தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்லுவார்கள். முதலில் பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டுப் பழகிக்கொண்டார்கள். ஆரம்பத்தில் இரண்டு மூன்று வாரத்திற்குக் குஷாலாகத்தான் இருந்தது. ஆனால், கூட வேலை செய்யும் பெண் கூலிகளின் பேச்சும் நடத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மூன்றாவது வாரத்தில் தாய்க் கிழவிக்கு மலைக் காய்ச்சல் வந்தது. ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக மருதியும் போய்விட்டு வருவாள்.

அப்பொழுது தேயிலை ஸ்டோர் மானேஜர் அவளை ஆஸ்பத்திரியில் கண்டார். ‘புது உருப்படி’ என்பதால் அவர் ‘குளித்துவிட்டு வா!’ என்றதின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. கூலிகளின் சம்பிரதாயத்தைப் பற்றி காரியம் மிஞ்சிய பிறகுதான் அறிய முடிந்தது. கிழவிக்கு வயிற்றில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. ஆனால், பக்கத்தில் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் இது மிகச் சாதாரணமான காரியம் என்று ஆயிற்று. அதற்கப்புறம் அவள் அந்தத் திசையிலேயே எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் ஸ்டோர் மானேஜர் லேசானவரா? விலக்க முடியாத பழக்கம். வேறு விதியில்லாமல் தலை கொடுக்க வேண்டியிருந்தது. தன் வெள்ளையனை நினைத்துக் கண்ணீர் வடித்தாள் மருதி. வெள்ளையன் இருந்தால்…

நாட்களும் ஓடின. மருதியின் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. பெண் என்று தெரிந்ததும் மருதிக்குத் தாங்கமுடியாத துக்கமாக இருந்தது. பெரிதானால் அதற்கும் அந்தக் கதிதானே…!

கிழவியிருப்பதினால் குழந்தைப் பாதுகாப்பிற்குச் சிறிது வசதியாக இருந்தது. அந்த மலேரியாப் பிரதேசத்தில் என்ன இருந்து என்ன பயன்? உயிர் வாழ வேண்டும் என்ற வேட்கை ஜீவநாடியில் இருக்க வேண்டும். அது அந்தக் குழந்தைக்கு இருந்தது.

தேயிலை பூக்க ஆரம்பித்துவிட்டது என்றால் மலேரியா தேவதைக்குப் பசி என்று அர்த்தம். நீர் வீழ்ச்சியிலும் ஜலம் வற்றிவிடும். வேலையும் அதிகம். எண்ணிக்கையில்லாமல் பிறக்கும் மலேரியாக் கொசுக்களைப் போல் கூலிகளும் மடிவார்கள். அங்கேயே பல காலம் தங்கிப் பழகிப்போன கூலிக்காரர்களைப் புலி அடித்துத் தின்றால் அதற்கும் மலேரியாக் காய்ச்சல் வந்துவிடும். அவ்வளவு சக்தி பொருந்திய மலேரியாவின் முன்பு கிழவியின் பொக்கான சரீரம் எதிர்த்து நிற்க முடியுமா? மருதியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அவள் போய்விட்டாள். கிழவியின் மரணம் மருதிக்குப் பின்பலத்தையே போக்கி, வாழ்க்கையின் தனிமையை அதிபயங்கரமாக்கியது. வேறு வழியில்லாவிட்டால், என்ன பயங்கரமாக இருந்தால்தான் என்ன?

தெய்வத்தின் கருணை அவ்வளவு மோசமாகப் போய்விடவில்லை. கண்ணைக் கெடுத்தாலும் கோலையாவது கொடுத்தது. ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்டதெய்வத்திற்குத் தான் ருசித்துப் பார்த்துத்தான் சமர்ப்பிப்பார். தற்செயலாக வருவதுபோல் திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித் அவர்களை அழைத்து வந்தார். ஸ்மித்தினுடைய ரசனையும் அவ்வளவு மட்டமானதன்று.

மருதியும் குழந்தையுடன் பங்களாவின் பக்கத்தில் தோட்டக்காரியாக வசிக்க ஆரம்பித்தாள்.

இப்படி இரண்டு வருஷம் சென்றது.

4

ஸர் ஜோஸப் பிட்ஜ்மார்ட்டின் கிரௌனின் மூனாவது தலைமுறைக்கு முன்பு, குடும்ப கௌரவத்தை ஸ்தாபித்த ஸர் ரெட்மன்ட் கிரௌன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்திற்குக் காரணமான அசல் பிரிட்டிஷ் குணத்தைப் பெற்றவர். அவர் ஏதோ ஒரு பெயர் தெரியாத பாங்கியில் குமாஸ்தாவாக இருந்த தகப்பனாரை அடிக்கடி தொந்தரவு செய்து, குடும்பத்தில் காலாடி என்ற பட்டப் பெயருடன் கப்பலேறி, இலங்கைத் தேயிலையில் பட்டமும் பணமும் சேகரித்து, ஒரு பிரபுவின் குடும்பத்தில் கலியாணம் செய்துகொண்டவர்.

அந்த மூன்றாவது தலைமுறையின் குடும்ப இலட்சியத்தின் சகல குணங்களையும் துணிச்சலையும் ஸர் ஜோஸப்பின் ஏகபுத்திரியான மாட் கிரௌன் பெற்றிருந்தாள். இங்கிலீஷ் மோஸ்தர்படி அவள் அழகு ஆட்களை மயக்கியடிக்கக் கூடியது. அவர்கள் ‘ஸெட்’டில் அவள் செய்யாத அட்டகாசம் கிடையாது. திடீரென்று அவளுக்கு ஆகாய விமானத்தின் வழியாக உலகத்தை ஒரு சுற்றுச் சுற்றி வர வேண்டும் என்று பட்டது. பிறகு என்ன? புறப்பட்ட பத்தாம் நாள் இலங்கையில் விமானத்தின் கோளாறினால் இறங்கவேண்டியதாயிற்று.

திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித்திற்கு ஒரு தந்தி பறந்தது. அவர் தமது மோட்டாரை எடுத்துக்கொண்டு கொழும்புக்குத் துரிதமாக வந்தார். அன்று முதல் இரண்டு நாட்கள் கொழும்பில் குதூகலம். ஸ்ரீமதி கிரௌன் குஷியான பேர்வழி என்று அவர் கண்டுகொண்டார்.

புதிய அனுபவத்தில் மிக்க ஆசையுள்ள ஸ்ரீமதி கிரௌனிற்கு இது மிகவும் பிடித்தது. இருவரும் தோட்டத்திற்குப் பிரயாணமானார்கள்.

பங்களாவில் அவளுக்கு ஒரு தனியறை. மருதி அவளுக்குப் பணிவிடைக்காரி. ஸ்ரீமதி மாட் அசட்டுப் பேர்வழியல்ல. தோட்டங்களில் பிரம்மசாரிகள் கறுப்புப் பெண்களை எப்படி நடத்துவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்தப் ‘போக்கிரி’யுடன் பழகுவதில் ஒரு உற்சாகம்.

உஷ்ணப் பிரதேசம் மதனனின் ஆஸ்தான மண்டபம் என்பது மேல்நாட்டு அபிப்பிராயம். எனவே, திரு. ஸ்மித்தும் ஸ்ரீமதி மாட் கிரௌனும் காதலர்கள் ஆனதில் அதிசயமில்லை.

அப்பொழுது…

சிறையிலிருந்து விடுபட்ட வெள்ளையன் நேராக ஊருக்குப் போகவில்லை. நேராக மாமனார் வீட்டிற்குச் சென்றான். அங்கு மருதியைக் காணாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. சிறையிலிருந்து வரும்பொழுதே அவன் மனம் உடைந்துவிட்டது. மருதியின் நினைவு ஒன்றுதான் பசையாக இருந்தது அவனுக்கு.

மாமனிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு, மருதியைப் பார்ப்பதற்காக அவன் தேயிலைத் தோட்டத்திற்குப் புறப்பட்டான்.

வெள்ளையனும் மாமனைப்போல் மருதியின் இலட்சியமான தேயிலைத் தோட்டத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு சென்றான்.

‘வாட்டர் பால’த்திற்கு வரும் ஒரே மோட்டார் பஸ் சாயங்காலம் அங்கு வரும்.

இறங்கியவுடன் பக்கத்தில் நின்றவர்களை விசாரித்தான். அவர்கள் சிரித்துக்கொண்டு பங்களாவின் பக்கத்திலிருக்கும் குடிசையைக் காட்டினார்கள்.

அவன் நேரே நடக்கும்பொழுது, எதிரே, அந்த மங்கிய வெளிச்சத்தில் துரையும் துரைசானியுமாக இருவர் இடையில் கைபோட்டுக் கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு சென்றார்கள்.

அவனுக்கு மருதியின் நினைவு பொங்கியது.

குடிசையை யடைந்து கதவைத் தட்டினான். உள்ளிலிருந்து ஈனஸ்வரத்தில், “யாரது?” என்று குரல் கேட்டது. மனமுடைந்த குரல்; வெள்ளையனுக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

“மருதியா?” என்று கதவைத் திறந்தான். கருங்கம்பள்ளியில் மருதி படுத்திருந்தாள். பக்கத்தில் குழந்தை படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.

மாடத்தில் தகர விளக்கு புகைவிட்டுக்கொண்டிருந்தது.

வெள்ளையன் திடுக்கிட்டான். மருதி பேய் என்று பயந்தாள். பேயாக இருந்தாலும் புருஷனின் பேய் என்று பட்டதால் எழுந்து உட்கார்ந்து, “வெள்ளையனா?” என்றாள்.

வெள்ளையன்தான்! அவளைக் கையைப் பிடிக்கப் போனான். “என்னைத் தொடாதே! மேலெல்லாம் பாத்தியா?” என்று முதுகையும் கைகளையும் காட்டினாள். மேலெல்லாம் பறங்கிப் புண்.

வெள்ளையனுக்கு நெஞ்சில் சம்மட்டிகொண்டு அடிப்பது போல் இருந்தது.

“இங்கே இதுதான் வளமொறை!”

வெள்ளையன் பதில் பேசவில்லை. அவன், “இங்கிருந்து புறப்பட வேண்டும்!” என்றான். அவள், “என்னால் வர முடியாது. குழந்தையைக் கொண்டுபோ!” என்றாள்.

முதலில் தன் குழந்தை என்பதில் ஆசை. பின், வேறு யாருடையதோ என்பதில் பொறாமை.

“உன் குழந்தைதான்!” என்றாள்.

“கண்ணாணை?”

“கண்ணாணை!”

“கிளவி போன வருசந்தான் செத்துப்போனா!”

வெள்ளையன் பதில் சொல்லவில்லை.

மருதி கூரையிலிருந்த தகரப் பெட்டியை எடுத்தாள். அதில் 5 ரூ. நோட்டுக்களாக 200 ரூ. இருந்தது. அது துரை அப்போதைக்கப்போது கொடுத்தது.

“எஞ் சம்பளப் பணம்… புள்ளையைப் பாத்துக்கொ!” என்று அதை நீட்டினாள்.

அன்று இருவர் தூங்கவில்லை.

பேசி முடிவதற்குள் விடிந்துவிட்டது.

“இந்தா!” என்று குழந்தையை நீட்டினாள்; “அதும் பேரு வெள்ளச்சி!”

வெள்ளையன் தலை மறையும் மட்டும் ஓர் உருவம் பாறையின் மீது நின்று பார்த்துக்கொண்டேயிருந்தது.

“அந்த லெக்கிலேதான் நம்ம ஊரு!” என்று சொல்லிக் கொண்டு அடிவானத்தின் பக்கம் பார்த்துக்கொண்டே நின்றது.

ஒரு சிரிப்பு – ஒரு பெருமூச்சு!

வாசவன்பட்டிச் சவுக்கையில் பண்ணைப் பிள்ளை உட்கார்ந்து ‘கோடு’ விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். பொழுது இருட்டிவிட்டது. எதிரில் நிற்கும் ஆள் தெரியாது.

அப்பொழுது ஓர் உருவம் தெருவின் ஓரத்தில் வந்து நின்றது.

“யாரது?”

“சாமி, வெள்ளையனில்லா!”

“எப்பலே வந்தே? புத்தியாயிரு சவமே! கையிலே என்னலே?”

“புள்ளை சாமி!”

“அவ, மருதி எங்கெலே!”

“செத்துப்போனா, சாமி!… சாமீ!”

“என்னலே!”

“பணம்!”

“போலே, முட்டா மூதி! நீயே வச்சுக்கோ! புத்தியாப் பொளெ!”

“புத்தி!”

5

‘வாட்டர் பால’த்தில் வெள்ளையன் வந்துபோன பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. மருதிக்கு உலகத்தின் மீது இருந்த சிறுபசையும், இப்பொழுது அவளை விட்டு விலகி நெடுந்தூரம் சென்றுவிட்டது. அடிக்கடி குழந்தையின்மீது நினைவு சென்று விழுந்து கொண்டேயிருந்தது. குழந்தைக்கு வெள்ளைச்சி என்ற பெயர் கொடுத்திருந்தாள். நியாயமாக, அந்த விஷயத்தில் விதி சரியாகத்தான் நடந்துகொண்டது, அதை வெள்ளையனிடம் சேர்த்து விட்டது.

துரையவர்கள், சீமைக்குத் தனது புதிய ஆங்கிலக் காதலியுடன் செல்லுமுன் மருதிக்குக் கொடுத்த பரிசு – பரங்கிப் புண். அதனுடைய ஆதிக்கம் அதிகமாக வளர ஆரம்பித்தது.

அடுத்த துரை வந்ததும் – அவருக்கு சுகாதாரம் ஒரு பெரிய பைத்தியம் – மருதிக்குத் தோட்டக்காரி என்ற அந்தஸ்துப் போய் மறுபடியும் அவள் தேயிலைக் கூலியாகிவிட்டாள். ஆனால் முன் போல் பெரிய தெய்வங்கள் இவளை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது; அதற்குப் பதிலாக வசைமொழிகள் கிடையாது போனால் அவள் அதிர்ஷ்டம்.

அங்கிருக்கும் கூலிகளில் பலர் அவளுக்குக் கள்ளுத் தண்ணி வாங்கிக் கொடுத்து அவளுடைய தயவை எதிர்பார்ப்பது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சில சமயம் மருதிக்கு, ஊரைப் பார்த்துப் போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றும். ஊருக்குப் போனால் அப்பன் வீட்டில்தான் இருக்கவேண்டும். வெள்ளையனிடம் செல்வதற்கு மனத்தில் எவ்வளவு ஆசை இருந்தும், அங்கு செல்வதற்கு மனம் ஒப்பவில்லை.

இங்கு வந்த சில காலத்திற்குள் அவளுடைய உருவம் அதன் யௌவனக் களை எல்லாம் மாறிவிட்டது. பழைய மருதியல்ல; வாசவன்பட்டியில் இருந்த அவளுடைய சிரிப்பும் பேச்சும் பழங்கதையாகிவிட்டது.

அன்று விடியற்காலம் வெள்ளையன் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்ற காட்சி அவள் கண் முன் அடிக்கடி தோன்றும். குழந்தை, குழந்தை, குழந்தை! இதுதான் எப்பொழுதும் நினைப்பு. வெள்ளைச்சி இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள், பேசுவதற்குப் படித்திருப்பாளா? – என்பதெல்லாம் கனவு.

உள்ளூரப் பூச்சியரித்தது மாதிரி நினைவுகள் குடைய ஆரம்பித்துவிட்டால் பொக்கான தேகம் என்னதான் எதிர்த்து நிற்க முடியும்? செத்தால் வாசவன்பட்டியில் தான் சாக வேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது.

இப்பொழுது மருதிக்குக் கால் கைகளில் புண். அத்துடன் குத்திருமலும் சேர்ந்து கொண்டது. ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியை எத்தனை நாள் குடித்தும் பயன் இல்லை. வைத்தியர் மருந்தூசி குத்த வேண்டும் என்றார். அது கொஞ்சநாள் கங்காணிச் சுப்பன் தயவில் நடந்தது; அதுவுமல்லாமல் அவளுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த பேச்சியும் கூட இருந்து உதவி செய்தாள்.

அது எப்படியிருந்தாலும் காலையில் தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்வது தடைப்பட்டுவிடக்கூடாது. அதில் கங்காணிச் சுப்பன் கறார் பேர்வழி. உதை, அடி, அப்புறம் வசவு முதலியவை சாதாரணத் தண்டனைகள். இதைவிடக் கொடுமையானது அபராதம் பிடித்து வாரக்கூலியில் மண்ணைப் போடுவது.

அன்று ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டு வந்து, கொழுந்து எடுக்கப் போவதற்குச் சற்று நேரமாகிவிட்டது. கூடையைத் தோளில் போட்டுக் கொண்டாள். கங்காணிச் சுப்பன் சுற்றிப் பார்த்துவரும் இடத்தின் பக்கம் அல்லாமல் வேறு பக்கமாகச் செல்லவேண்டும் என்று பயந்து கொண்டே, தோட்டத்தின் மேல் பக்கமாகச் சென்று கொழுந்துகளை அவசர அவசரமாகப் பறித்துக்கொண்டிருந்தாள் மருதி. அப்பக்கத்தில் தேயிலைச் செடிகள் கொஞ்சம் உயரமாகச் செறிந்து வளர்ந்திருந்தன. மறுபக்கத்தில் தனக்கு உதவியான பேச்சியும் கங்காணிச் சுப்பனும் இருப்பதை அவள் பார்க்கவில்லை. அவர்கள் இருந்த நிலைமை அங்கு சர்வ சாதாரணம்.

ஆனால், இவள் நிற்பதைச் சுப்பன் பார்த்துவிட்டான். அவள் தன்னை ஒற்றுப் பார்க்கிறாள். அதனால் ஏதேனும் சச்சரவு வந்து துரை காதிற்கு எட்டிவிடும் என்ற பயம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எதிரியின் மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம். சுப்பனும் ஒரு ஜீவன் தானே!

சுப்பன் அவள் மீது பாய்ந்து, இரைந்து கொண்டே, உதைக்க ஆரம்பித்தான்.

மருதி, பேயோ என்ற நினைப்பில் கதிகலங்கிக் கல்லாக நின்றாள்.

சுப்பன், கூடையைப் பிடுங்கி, இலைகளை அவள் தலை வழியாகக் கொட்டி, நெஞ்சில் ஒரு மிதி மிதித்தான். கூடையில் இருந்தவை கொழுந்துகள் அல்லாமல் பெரும் பாகம் முற்றிய இலையாக இருந்ததைக் கண்டதும் சுப்பனின் கட்சி இன்னும் வலுத்தது. கையில் இருந்த கழியினால் நன்றாகச் சாத்திவிட்டு, அபராதம் போடுவதற்கு நேராக ஆபீஸைப் பார்த்து நடந்து விட்டான்.

பேச்சிக்குத் தடுக்க ஆசையிருந்தாலும் சுப்பன் என்றால் பெரும் பயம். அதுவுமல்லாமல் அவன் தன்னிடம் நல்லதனமாக நடந்துகொள்ளும்பொழுது அதைக் கெடுத்துக் கொள்ள மனமில்லை. செடி மறைவில் ஒதுங்கியிருந்தாள். அவன் ஓடிய பிறகு மருதியிடம் சென்று பார்த்தாள்.

மருதிக்குப் பேச்சு மூச்சில்லை. பக்கத்திலிருந்த ஓடையில் ஜலம் எடுத்து, அவள் முகத்தில் தெளித்து, நினைவு வரச் செய்தாள் பேச்சி.

மருதிக்குப் பிரக்ஞை வந்ததும் ஒரு பெரிய இருமல். அதில் இரண்டு மூன்று துளி இரத்தம் விழுந்தது.

கைத்தாங்கலாக மருதி குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

6

மருதிக்கு அதிலிருந்து எழுந்து நடக்கவும் ஜீவனற்றுப் போய்விட்டது. சில சமயம், வியாதியின் மகிமையால் சித்த சுவாதீனமற்று, குழந்தையுடன் கொஞ்சுவதுபோல் சிரித்துப் பேசிக் கொள்வாள். கலியாணமான ஜோரில் இருந்த முகக்களை அப்பொழுதுதான் தோன்றும்.

மறுபடியும் புத்தி தெளிந்தால், மங்கிய கண்கள் – இடிந்த மனத்தின் செயலற்ற ஏக்கம் – அவள் முகத்தில் கவிந்திருக்கும்.

பேச்சிக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘ஊருக்கு எழுத்துப் போடணும்’ என்று சுப்பனிடம் சொன்னாள். வெள்ளையனுக்கு, ‘இதைத் தந்தியாகப் பாவித்து வரவேண்டும்!’ என்று ஒரு கார்டு எழுதப்பட்டது.

அதுபோன நான்கு தினங்களுக்குள், புதிதாக வந்த துரைக்குக் கூலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதிலும் வியாதியஸ்தராக இருப்பவர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

மருதியுடைய பெயரும் அந்த ஜாபிதாவில் சேர்ந்தது.

இந்தச் சமாசாரம் மருதிக்கு எட்டியதும், அவளுக்குத் தெளிவு ஏற்பட்டது. வாசவன்பட்டிக்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கையிலோ என்னவோ, சிறிது நடமாடவும் முடிந்தது. ஆனால் பலவீனம் மாறவில்லை.

புதன்கிழமைக் கப்பலுக்கு அனுமதிச் சீட்டு, சம்பளம் – எல்லாம் வந்து சேர்ந்தன.

7

வெள்ளிக்கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது. மருதி குளக்கரை வழியாகச் சேரியை நோக்கி நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தாள். அவள் இருந்த நிலையில் யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. கையில் ஒரு கம்பு. தலையிலும் இடுப்பிலும் இரண்டு மூட்டைகள். இடையில் வைத்திருந்த மூட்டையில் நாலைந்து கதலிப் பழம், இரண்டு ஜோடி வளையல்கள் – எல்லாம் வெள்ளைச்சிக்கு.

சேரியில் பறையும் தம்பட்டமும் அடிப்பது அவள் காதில் ஒலித்து நடைக்கு வேகமூட்டியது. மூலை திரும்பினால் ஊர்ப் பொட்டல், அதற்கப்புறம் அந்த மூலையில் வெள்ளையன் குடிசை, சுடலை மாடன் பீடத்தை அணுகியாய்விட்டது.

அப்பொழுது மேளதாள முழக்கங்களுடன் அந்த மத்தியானப் பனிரெண்டு மணி வெய்யிலில் ஓர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முன் பக்கம் சிலம்பம் ஆட்டத்துடன் பறை! அதற்குப்புறம் ஒற்றைக் குதிரை சாரட்டில் மாப்பிள்ளையும் பெண்ணுமாக ஓர் ஊர்வலம்!

நெருங்கிப் பார்க்கிறாள் மருதி. கண் கூசுகிறது. கொண்டையில் பூவும், நெஞ்சில் சந்தனமும், ஜரிகைக் குல்லாவும் வைத்து உட்கார்ந்திருப்பவன் – வெள்ளையன்தான்! என்ன ஜோராக உட்கார்ந்திருக்கிறான்! அவள் மனசில் ஏதோ பாரம் நீங்கியது மாதிரி இருந்தது. அவளை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

மருதிக்குத் திடீரென்று குத்திருமல் மல்லுமல்லென்று வந்துவிட்டது. கீழே துப்பினாள்; இரண்டு துளி இரத்தம் கலந்திருந்தது.

8

“ஏ மூதி! புல்லுக்கட்டு என்ன விலை?”

“ஆறணாச் சாமி! எடுக்கறதுன்னா எடுங்க…”

“ஒரே விலையாச் சொல்லு…!”

“ஒரே வெலேதான், ஆறணா! எங்கனெ தூக்கியார…?”

அங்கே நிற்பவன் டவாலிச் சேவகன், பாளையங்கோட்டை சப் ரிஜிஸ்திராரர் சேவகன். எதிரே நிற்பவள் மருதி. வாசவன்பட்டியில் அவள் கனவு கண்ட சந்தோஷத்தைப் பாளையங்கோட்டையில் பெற முயற்சிக்கிறாள். மருதி வந்ததும் சென்றதும் வாசவன்பட்டியினருக்குத் தெரியாது. பாளையங்கோட்டையில் ஆஸ்பத்திரி இருக்கிறது. மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொள்ள. ஏதோ கூலி கிடையாமலா போய்விடும் என்ற தைரியம் அவளுக்கு.

பகலில் புல் வெட்டி விற்பது. கிடைக்கும் காசு அன்றைய வயிற்றுப் பாட்டிற்குப் போதும். தாமிரவர்ணித் தண்ணீர் விசேஷத்தினாலோ என்னவோ, நோயின் கொடுமைகள், அதாவது வெளித்தோன்றிய புண்கள், உள்ளடங்கின. மேலெல்லாம் மேக நீரின் மினுமினுப்பும் கறுப்புத் தடங்களும் இருந்தாலும் மருதி அவ்வளவு மோசமாகிவிடவில்லை.

சப் ரிஜிஸ்திரார் வீட்டில் வாடிக்கையாகப் புல் கொண்டு வந்து போடுவதாக ஒப்புக்கொண்டாள். வாடிக்கையாகப் போடுவதாலும் அன்றாடம் கைமேல் காசு கிடைப்பதாலும் நான்கணா போதும் என்று பட்டது.

மருதியின் தேவைகள் ஒன்றும் ஜாஸ்தியாகிவிடவில்லை. அதனால் அவளுக்கு அந்த நான்கணாவில் சிறிது மிச்சமும் விழுந்தது.

ஆனால், குழந்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது. எப்படிப் போய்ப் பார்ப்பது? அதிலும் வெள்ளையனுக்குத் தெரியாமல்…

‘குழந்தை, குழந்தை!’ – இதுதான் சதாகாலத் தியானமும்.

ரிஜிஸ்திரார் பக்கத்தூருக்குப் போகவேண்டியிருந்ததால் இரண்டு மூன்று நாட்களுக்குப் புல் வெட்டும் தொழிலில் சிறிது ஓய்வு. ஏன் வாசவன்பட்டிக்குப் போய்விட்டு வரக்கூடாது?

அவள் கொழும்பிலிருந்து வெள்ளைச்சிக்கு வாங்கிவந்த ஒரு ஜோடிக் கண்ணாடி வளையல்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

புறப்படும்வரையில் வெள்ளைச்சியை எப்படிச் சந்திப்பது என்ற பிரச்னை எழவில்லை. வழியிலெல்லாம் அதே கேள்வி தான். குழந்தையை எப்படிச் சந்திப்பது?

ஊரைத் தாண்டியதும், மருதி மூட்டையை இடுக்கிக் கொண்டு, வெகு வேகமாக நடந்தாள். ஒவ்வொரு நிமிஷமும் வெள்ளைச்சியின் உயரம், பேச்சு இவையெல்லாம் எப்படியிருக்கும் என்ற மனக் கனவு.

9

மருதி வாசவன்பட்டிக்குள் செல்லும்பொழுது பகல் 11 மணியிருக்கும். அவளும் ஊரைச் சுற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டமில்லாத பாதையின் வழியாகவே சென்றாள். நல்ல காலம், தெரிந்தவர்கள் ஒருவராவது எதிரில் வரவில்லை.

வெள்ளையனின் வீடு வந்துவிட்டது. சேரியில் பறையர்கள் நடமாட்டம் அதிகமில்லை. பகலில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்கள் என்ன ஜமீன்தார்களா? அல்லது அவர்களுக்கு வயிறில்லையா?

வெளியே எதிரே நின்று ஒரு நாய் குரைத்தது.

திடீரென்று குடிசைக்குள்ளிருந்து ஒரு குழந்தையின் கதறல், பொத்துப் பொத்தென்று விழும் அடியின் சப்தம்! அதற்குமேல், “கஞ்சிப் பானையெ கவுத்துப்புட்டியே, மூதி! என்னெத்தே குடிப்பே! உங்கப்பன் வந்தான்னா மண்ணையா திம்பான்! அந்தத் தட்டுவாணி முண்டையோட தொலையாமெ… சவவே, சவமே…” என்ற ஒரு பெண்ணின் கோபச் சொற்கள்.

மருதிக்கு உதிரம் கொதித்தது. உள்ளே பாய்ந்து சென்றாள். அடிபட்டுக்கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே கையில் வாரியெடுத்துக்கொண்டு, அடித்துக்கொண்டிருந்தவளைக் கன்னத்தில் ஓங்கியடித்தாள்.

எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஒரு புதிய ஆள், வீட்டிற்குள் வந்து, ஒருவரை அடித்தால் யாராவது சும்மா இருப்பார்களா?

சண்டை ஏக தடபுடலாக ஆரம்பித்தது. ஒருவரையொருவர் மாறி மாறி அடித்துக்கொண்டனர். மருதிக்கு முகத்திலும் மார்பிலும் இரத்தம் கண்டது.

இவர்கள் கூக்குரலைக் கண்டதும் குழந்தையும் வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. சேரிப் பெண்கள் கூடினார்கள்.

பாதிப் பேர் மருதியின் கட்சி, சிலர் வெள்ளையனின் இரண்டாவது மனைவியின் கட்சி. ஆனால், இன்னும் ஒருவரும் மருதியை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மருதியும், தன்னை யார் என்று கூறிக்கொள்ளவும் இல்லை.

அந்நிய வீட்டிற்குள் புகுந்து யாராவது அடிக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? சேரியின் ஏச்சும் உதையும் அவளுக்குக் கிடைத்தன. மருதி துரத்தப்பட்டாள். அன்று சாயங்காலம் குழந்தை வெள்ளைச்சியை வீட்டில் காணவில்லை.

என்றும் உதையும் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற குழந்தை, பொரிகடலையும் தின்பண்டமும் வாங்கிக் கொடுக்கும் ஒருவரைக் கண்டால் உடன் வருவதற்குச் சம்மதியாமலா இருக்கும்?

மருதி குழந்தையுடன் பாளையங்கோட்டைக்கு வரும்பொழுது இரவு ஒன்பது மணி. பாளையங்கோட்டையில் இருந்தால் தொடர்ந்து வந்து பிடித்துவிடுவார்களோ என்ற பயம் அவளுக்குண்டு.

இரவில் நேராக ரயிலடியில் சென்று படுத்துக் கொண்டாள். எங்காவது வெகு தூரத்தில் போய்விடவேண்டும் – இவர்கள் இருக்கும் இடத்திற்கு வெகு தூரத்திற்கப்பால்!

மருதிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று யார் கூற முடியும்?

ரயில் ஸ்டேஷனில் கங்காணிச் சுப்பனைச் சந்தித்தாள். அவன் இடுப்பில் வெள்ளி அரைஞாணும், வெள்ளை வேட்டியுமாகத் தடபுடலாக இருந்தான்.

“ஏட்டி, மருதி! நீ எங்கெ, போறே!” என்றான்.

பிறகு என்ன! கங்காணிச் சுப்பன் ‘வாட்டர் பால’த்திற்குப் போகிறானாம். அவளையும் கூப்பிட்டான். ‘சரி’யென்று உடன்பட்டாள்.

“இந்தப் புள்ளெ யாரு?”

“என்னுது!”

“சவத்தெ அங்கெ ஏன் கொண்டாரே?”

“அது செத்தாலும் என் கிட்டத்தான் சாகணும்!”

10

பதிநான்கு வருஷங்கள் கழிந்தன.

கங்காணிச் சுப்பனுடன் சென்ற மருதி இத்தனை காலமும் ‘வாட்டர் பால’த்திலேயே கழித்துவிட்டாள். அங்கு இப்பொழுது மருதியின் ஸ்தானம் தேயிலைக் கூலி என்பதல்ல. சுப்பனின் மனைவி என்றே அழைக்கப்பட்டாள். பதிநான்கு வருஷங்கள் ஒருவனுடன் தன் வாழ்க்கையைப் பிணித்துக்கொண்ட பிறகாவது மனைவி என்ற அந்தஸ்து வரக்கூடாதா?

மருதி – அவள் இப்பொழுது கொஞ்சம் பருத்து, சற்று விகாரமாக இருந்தாள். முன் பல் இரண்டு விழுந்துவிட்டது. தலையும் கத்தை கத்தையாக ஒவ்வொரு பக்கத்தில் நரைத்து விட்டது. மருதி சுப்பனுக்கு என்ன மருந்து வைத்துவிட்டாளோ என்று கூலிகள் பேசிக்கொள்வதுண்டு. காரணம், சுப்பனின் திருவிளையாடல்கள் எப்படியிருந்தாலும், மருதியின் பேச்சை யாராவது எடுத்தால் அவர்கள் கதி அதோ கதிதான்.

வெள்ளைச்சி – அவள்தான் மருதியின் வாழ்க்கைப் பற்றுதலுக்கு ஒரு சிறு தீபம்! – ‘வாட்டர் பால’த்திலேயே பதிநான்கு வருஷங்களைக் கழித்தால் ஒருவரும் களங்கமற்றவராக இருக்க முடியாது. அவளுக்குச் சகல விஷயங்களையும் அடித்துப் பேசத் தெரியும். ஆனால் அவ்வளவும் வெறும் விளையாட்டுத்தனம். அவள் நின்ற இடத்தில் மௌனத்தைக் காண முடியாது. சிரிப்பும் சத்தமும் எங்காவது கேட்டால் வெள்ளைச்சி அங்கு இருக்கிறாள் என்று திட்டமாகச் சொல்லிவிடலாம். வெள்ளைச்சி இப்பொழுது பிராயமடைந்துவிட்டாள். மருதி கலியாணமாகி வாசவன்பட்டிக்கு முதல் முதலாக வந்த சமயத்தில் இருந்த மாதிரி அதே அச்சாக மூக்கும் முழியுமாக இருந்தாள். மருதிக்கு அவளை ஒரு நல்ல இடத்தில் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டுமென்று ஆசை. அந்த ‘வாட்டர் பால’க் கும்பலில், ‘கருவாட்டைக் காக்கிற மாதிரி’ (மருதியே இப்படிச் சொல்லிக்கொள்வாள்) காத்து வந்தாள். வெள்ளைச்சி வேலையில்லாமல் சுத்திக் கொண்டு வரவில்லை. அவளும் தேயிலைக் கூலியாகச் சிறிது காசு சம்பாதிக்கிறாள். வெள்ளைச்சியின் சம்பளம் வந்து வீடு போவதில்லை; ஆனாலும் அவள் கூலியைச் செலவு செய்யாமல் சேர்த்துவைத்தால்…

சுப்பன் இப்பொழுது தலைமைக் கங்காணி வேலை பார்த்து வருகிறான். அதனால் கொஞ்சம் சம்பள உயர்வு. மருதிக்கும் வெள்ளைச்சிக்கும் அவனுக்கும் போக எல்லோரும் சேர்ந்து குடிப்பதற்கும் சிறிது மிஞ்சும். கங்காணிச் சுப்பனுக்கு மேலதிகாரிகளிடம் தக்கபடி நடந்துகொள்ள அநுபவமும் உண்டு.

அதிலும் வெகு காலமாக இருந்துவரும் ஸ்டோர் மானேஜரின் கையாள் அவன். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகிவிட்டது. கிழவர், ‘வாட்டர் பால’ வாசத்தினால் பெற்ற சில வியாதிகளும் உண்டு. கம்பெனி அவருக்கு இன்னும் ஒரு வருஷத்தில் உபகாரச் சம்பளம் கொடுத்து அனுப்பிவிடும். ஆனால் தமது இடத்தில் தமது பந்து ஒருவனை வைத்துவிட்டுப் போகவேண்டும் என்று ஒரே பெண்ணைச் சகோதரியின் மகனுக்குக் கொடுத்து, அவனை அங்கு கொண்டுவந்து வைத்துவிட வேண்டும். இதை நிறைவேற்றுவதற்காகவே தம் சகோதரியின் மகன் தாமோதரனை அங்கு தருவித்தார்.

அப்பொழுது கம்பெனியின் முதலாளியிடமிருந்து ‘வாட்டர் பால’த்தில் ஒரு பள்ளிக்கூடம் வைக்கவேண்டும் என்று ஓர் ஆர்டர் வந்தது.

கம்பெனியின் விளம்பரத்திற்கு ராமசந்திரன் பதில் அளித்தான். கம்பெனியும் அவனை ‘வாட்டர் பால’த்துப் பள்ளிக்கூடத்தின் உபாத்தியாயராக நியமித்தது.

ராமசந்திரன் ‘வாட்டர் பால’த்திற்கு வந்து கொண்டிருந்த அதே பஸ்ஸில் ஸ்டோர் மானேஜரின் மகள் மரகதம் பள்ளிக்கூட விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். மரகதம் நல்ல அழகி.

11

பள்ளிக்கூடம் என்பது ஸ்டோர் மானேஜரின் வீட்டிற்கு எதிர்புறத்தில் இருந்த தேக்கந் தோப்பில் ஒரு சிறு குடிசை. அதில் ஒரு மேஜை, நாற்காலி, ஒரு கரும்பலகை, அதற்குப் பின்புறத்தில் ராமச்சந்திரனின் நார்க் கட்டில். எதிரே பிள்ளைகள் உட்கார்ந்து கொள்வதற்கு மணைகள். கூலிக்காரப் பிள்ளைகளுக்கு இது போதாதா?

மேஜையின் வலப்புறத்தில் தேயிலைத் தோட்டத்தின் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு நாலைந்து நாற்காலிகள்.

பிள்ளைகள் எண்ணிக்கை இருபதுக்கு மேல் போகாது. டாக்டருடைய இரண்டு சிறுமிகள், தேயிலை ஸ்டோர் குமாஸ்தாக்களின் மூன்று பையன்கள் – அவர்கள் எல்லோருக்கும் இனிமேல்தான் அட்சராப்பியாசம். பதினைந்து கூலிக்காரக் குழந்தைகள். எல்லாம் ஆறு வயசுக்கு மேற்படாதவை.

ராமசந்திரனுக்கு உபாத்திமைத் தொழிலில் ஒரு கிறுக்கு. அதிலும் கொஞ்சம் இலட்சியங்களும் அவனைப் போட்டு அலைத்தன. இல்லாவிடில் அவன் ஏன் பி.ஏ. படித்துவிட்டு, தகப்பனார் சிபார்சில் கிடைக்கவிருந்த உத்தியோகத்தையும் தள்ளிவிட்டு இங்கு வர வேண்டும்?

ராமசந்திரன் நல்ல அழகன்.

குழந்தைகளில் அவன் வித்தியாசம் பாராட்டுவது கிடையாது. கூலிக்காரக் குழந்தைகள் தங்கள் மடத்தனத்தினால் அவனைக் கோபமூட்டுவதும் உண்டு. ஆனால் சாயங்காலமாகிவிட்டால் குழந்தைகள் ‘ஸா’ருடன் விளையாடாமல் வீட்டிற்குச் செல்வதில்லை.

குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ரொம்பப் பிரியம். அதிலும் ‘ஸார்’ கதை சொன்னால் நேரம் போவதுகூடத் தெரியாது.

ராமச்சந்திரன், தன் பள்ளிக்கூடத்தின் முன்பு கொஞ்சம் அலங்காரமாக இருப்பதற்கு, புஷ்பச் செடிகள் வைத்துப் பயிர் செய்யவேண்டும் என்று நினைத்தான். ரோஜாப் புஷ்பங்கள் வனாந்தரமாக முளைத்துக் கிடக்கும் அப்பக்கத்தில் அதற்கு மட்டிலும் குறைவில்லை. மற்றச் செடிகளின் கன்றுகள் ஸ்டோர் மானேஜரின் வீட்டில்தான் ஏராளம்.

அதனால்தான் ராமசந்திரன் மரகதத்துடன் பேசிப் பழக நேர்ந்தது.

12

ராமசந்திரன் பள்ளிக்கூடத்தின் முன்பு இருக்கும் பாத்திகளுக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம் விட்டுச் சிறுவர்களெல்லாம் சென்றுவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் நிசப்தம்.

அவன் மனம் அடிக்கடி ஒரு சிந்தனையில் சென்று விழுந்து கொண்டிருந்தது. மரகதம்! – அவளுடன் தான் அதிகமாக நெருங்கிப் பழகுவது தவறு என்று அடிக்கடி பட்டுக்கொண்டிருந்தது. இந்தக் குழந்தைகளின் கலகலப்பான பேச்சுக்கப்புறம் மரகதத்திடந்தான் அவனுக்குப் பேச மனமிருந்தது.

அப்பொழுது வெள்ளைச்சி அங்கு வந்தாள்.

“என்ன விசேஷம்?” என்றான். வெள்ளைச்சியை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் பேசியதில்லை.

“எளுத்துப் படிக்கணும்! அதுக்காக வந்தேன்” என்றாள் வெள்ளைச்சி.

“படிக்க வேண்டுமா? பள்ளிக்கூட சமயத்தில் நாளையிலிருந்து வா!”

“தடிச்சி மாதிரி, அப்ப வரமாட்டேன். வெக்கமாக இருக்கு. இந்த நேரத்துக்கு வந்தா என்ன?”

“யாரும் ஏதாவது நினைக்கமாட்டார்களா – நீ என்னுடன் தனியாக இருந்தால்?”

“யாருக்கு அவ்வளவு தைரியம்? பல்லை உதுத்துப்புட மாட்டேனா?” என்றாள் வெள்ளைச்சி. அவள் முகத்தின் துடிதுடிப்பைக் கண்டதும் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவ்வளவு தைரியம், களங்கமற்ற தன்மை! அவளுக்குப் படித்துக் கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

“இப்பொழுது ஆரம்பிப்போமா?” என்றான் ராமசந்திரன். உடனே அவள் உட்கார்ந்துவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

முதலில் உயிரெழுத்துக்களை வரிசையாகச் சொல்லிக் கொடுத்தான்.

அரை மணி நேரமாயிற்று.

“மரகதம்மா மாதிரிப் படிக்க எத்தனை நாளாகும்?” என்றாள் வெள்ளைச்சி.

“ரொம்ப ஆசை இருக்கிறதுபோல் இருக்கே?” என்று சிரித்தான் ராமசந்திரன்.

“இன்றைக்கு இவ்வளவு போதும், நாளைக்கு வா!” என்றான்.

“சரி!” என்று அவள் எழுந்தாள்.

அச்சமயம் மரகதம், “வாத்யார் ஸார்!” என்று சிரித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

இருவரும் தனியே இருப்பதைக் கண்டதும் சிறிது நின்றாள்.

ராமசந்திரன் சிரித்துக்கொண்டு, “எனது புதிய மாணவி, உன்னைப் போல் படிக்கவேண்டுமாம்!” என்றான். அவன் குரல் தொனியைக் கேட்டதும் மரகதத்திற்குத் தோன்றிய சந்தேகம் மறைந்தது.

“வெள்ளைச்சிக்கு ஆசை ரொம்ப! பொல்லாதவள்!” என்றாள் மரகதம்.

“நானும் ஒங்களைப் போலப் படிக்கப் போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டாள் வெள்ளைச்சி.

“இன்று அத்தான் வந்திருக்கிறார். வீட்டுக்கு வருகிறீர்களா?”

“நான் என்னத்திற்கு? சமைத்தது வீணாகப் போகும்!” என்றான் ராமசந்திரன்.

“ஆமாம்! நாளைக்கு வேண்டுமானால் நான் செய்து தந்து விடுகிறேன், வாருங்கள் போகலாம்!” என்றாள் மரகதம்.

“புதிய ஆட்கள் இருக்கும்பொழுது நான் வருவது நன்றாக இல்லை. எப்படியும் நான் அவர்களைப் பார்க்காமலா இருக்கப் போகிறேன்? நாளைக்கு வருகிறேன்!”

“நான் சொல்வதைக் கேட்பீர்களா, மாட்டீர்களா?”

“இப்படி முரண்டினால்…”

“பின்னே…”

“இரண்டு பேருக்கும் பொதுவாக ஒன்று சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டது. பாதி வழிவரை கொண்டுவந்து விட்டுவிட்டு வருகிறேன்!”

“நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் போலிருக்கிறது!”

“இல்லை, மூன்றரை! நீ சொன்னபடிதான் பாதி கேட்கிறேனே!”

“கேட்க வேண்டாம், போங்கள்!” என்று விர்ரென்று திரும்பிச் சென்றாள் மரகதம்.

ராமசந்திரன், அவளைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடி, அவள் முன்பு நின்றான். அவள் கண்களில் நீர் தளும்பி நின்றது.

“இதற்கெல்லாம் இப்படி அழுதால்? வருகிறேன்!” என்று சொல்லி அவளுடன் சென்றான்.

பாதி வழியில் சென்றதும், “அத்தான் எதற்கு வந்திருக்கிறார் தெரியுமா?” என்றாள்.

“எதற்கு?”

“என்னைக் கலியாணம் செய்துகொள்ள!”

“அப்படியா! சந்தோஷம்.”

பிறகு இருவரும் பேசவில்லை.

13

வெள்ளைச்சியின் படிப்பு வெகு மும்முரமாகச் சென்றது. உயிரெழுத்து, மெய்யெழுத்து எல்லாம் பாராமல் சொல்வாள். சிறிது கஷ்டப்பட்டு எழுதவும் தெரியும்.

ராமசந்திரனுக்கு அவளிடம் ஒரு பிரேமை ஏற்பட்டது. அவளுடைய பேச்சில் ஓர் இன்பம். சில சில சமயம், முதிர்ந்த விபசாரியின் பேச்சுக்களுடன் களங்கமற்ற அவள் உள்ளமும் வெளிப்பட்டது.

படிப்பு முடிந்தால், கூலிக்காரர்களுடைய சமாசாரங்களை யெல்லாம் தன் அபிப்பிராயங்களுடன் கலந்து, அவனிடம் சொல்லுவாள்.

யாருக்கும் தெரியாமல் ஒன்றைச் செய்தால் பாவமில்லை. இது வெள்ளைச்சியின் அபிப்பிராயம்.

இதை எவ்வளவோ மாற்ற முயன்றும் ராமசந்திரனால் முடியவில்லை. ஆனால் அவனுடன் பழகியதில் சுத்தமாக இருக்கப் பழக்கப் படுத்திக்கொண்டாள் வெள்ளைச்சி.

மருதிக்கு மகள் வாத்தியாரிடம் சென்று வருவது பிடிக்கவில்லை. ஆனால் வெள்ளைச்சியிடம் எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை. வாத்தியாரைப் பற்றி ஏதாவது பேச்செடுத்தால் மல்லுமல்லென்று சண்டைக்கு வந்துவிடுவாள்.

துரை பங்களாவில் வேலை செய்யும் குதிரைக்காரச் சின்னானுக்கு அவளைக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது மருதியின் ஆசை.

கங்காணிச் சுப்பனும் சம்மதித்தான். விஷயம் பேச்சு மட்டில் இருக்கிறது. குதிரைக்காரச் சின்னானுக்கு அவளைக் கலியாணம் செய்துகொள்வதில் இஷ்டமாம்.

அன்று சாயங்காலம் வெள்ளைச்சி சிறிது நேரம் கழித்துப் பாடம் படிக்க வந்தாள்.

பாலர் பாடப் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “வா, வெள்ளச்சி, இந்த நாற்காலியில் உட்கார்! ஏது இவ்வளவு நேரம்?” என்றான் ராமசந்திரன்.

வெள்ளைச்சி பதில் சொல்லவில்லை.

ராமசந்திரன் சொல்லுவது அவள் காதில் ஏறவேயில்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன வெள்ளைச்சி இன்றைக்குப் படிப்பு சுகமில்லை போலிருக்கிறது! நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? வீட்டில் ஏதாவது சண்டையா?” என்றான்.

“நான் இங்கே வரப்பிடாதாம். குதுரைக்காரச் சின்னானை எனக்குக் கல்யாணம் செய்யணுமாம்!”

“அது நல்லதுதானே! முந்தியே சொன்னேனே, யாராவது சொல்லுவார்கள் என்று. மருதி சொல்லுகிறபடி கேள்!”

“நான் வரப்புடாதா? எனக்குச் சின்னான் பயலைப் புடிக்கலை. அப்போ-”

“அது எப்படி இருந்தால் என்ன? மருதி சொல்வதைக் கேள்!”

“நான் அப்படித்தான் வருவேன். மானேஜர் அய்யாகிட்ட சொல்லி என்னெ வர வுடாமெ ஆக்குவாங்களாம். நான் படிச்சா இந்த மூதிகளுக்கு என்ன?”

ராமசந்திரனுக்கு எப்படி விளக்குவதென்று தெரியவில்லை. அவள் பிடிவாதம் குழந்தையின் பிடிவாதத்தைப் போல் இருந்தது.

அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிடுவது மேல் என்று பட்டது. ஆனால் அவளை விரட்டுவதற்கு அவனுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு யோசனைப் பட்டது. ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. அவளைத் தானே கலியாணம் செய்துகொண்டால் – அவளுடைய குழந்தைத்தனம், அவளுடைய பிடிவாதம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் விளைந்த அன்பு, எல்லாம் வசீகரித்தன. ஆனால் பறைச்சி! ஒத்து வருமா?

“வெள்ளைச்சி! நீ என்னைக் கலியாணம் செய்து கொள்ளுகிறாயா?”

வெள்ளைச்சியின் முகத்தில் ஆச்சரியம், அன்பு, குதூகலம் – எல்லாம் அலைமேல் அலையாக எழுந்தன.

“கலியாணம் எதுக்கு?…” என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அப்பார்வையில், அவளது அன்பு, அதற்கு மேல், அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த தடையின் பயம் – எல்லாம் கலந்திருந்தது.

அவள் உள்ளத்தின் போக்கு ராமசந்திரனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவனுக்காக அவள் எதை வேண்டுமானாலும் பணையம் வைக்கக்கூடியவள்.

“வெள்ளைச்சி! விளையாட்டிற்கல்ல – நிஜமாகக் கேட்கிறேன், என்னைக் கலியாணம் செய்துகொள்!” என்றான்.

அவள், “ஆகட்டும்!” என்று அவனை நெருங்கினாள்.

14

ஸ்டோர் மானேஜருக்கு ஐம்பது வயதிற்கு மேலானாலும் மனமும் ஆசையும் குறைந்தபாடில்லை. இப்பொழுது அவருடைய திருவிளையாடல்கள் எல்லாம் மிகவும் மறைமுகமாக நடக்கும். ஆனால், அவற்றிற்குக் கையாள் குதிரைக்காரச் சின்னான்.

நெடுநாளாக ஸ்டோர் மானேஜருக்கு வெள்ளைச்சியின் மீது கண் உண்டு. இப்பொழுது இருந்த வளமையில், மருதியும் கங்காணிச்சுப்பனும் முரடர்கள். மேலும் வெள்ளைச்சியின் குணம் ‘வாட்டர் பால’த்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஆசை யாரை விட்டது? குதிரைக்காரச் சின்னான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டான். நெடுநாளாகக் கங்காணி வேலையில் அவனுக்குக் கண் உண்டு.

நீர்வீழ்ச்சியின் கீழ் 21/2 மைல் வரை தேயிலைத் தோட்டம் படர்ந்திருந்தது. அப்பக்கத்தில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவு கிடையாது. தோட்டத்தின் எல்லையைத் தாண்டினால் அழிக்கப்படாத ‘ரிஸர்வ்’ காடுகள். அவற்றின் இடையே நீர்வீழ்ச்சியிலிருந்து ஓடும் ஆறு பாறைகளின் மீது சலசலத்துப் பாய்கிறது.

வெள்ளைச்சியை மெதுவாக அந்தப் பக்கமாக அழைத்து வர, அவளுடன் கூட அலையும் சிறு பெண்களுக்குக் காசு கொடுக்கப்பட்டது.

அவர்கள் அப்போதைக்கப்போது சின்னானின் நட்பைப் பெற்றவர்கள். இத்தனை நாளும் அகப்படாத வெள்ளைச்சியைப் பிடித்துக் கொடுப்பதில் அவர்களுக்குக் கொஞ்சம் குதூகலம்! ஏற்பாட்டின்படி நடந்தது. சின்னான், ஸ்டோர் மானேஜருடன் அங்கு வந்திருந்தான். வெள்ளைச்சியைக் கொழுந்து பறிக்க வைத்துவிட்டு, மெதுவாக நழுவிவிட்டார்கள் கூடவந்த சிறுமிகள்.

வேறு விஸ்தரிப்பானேன்? அவளை முரட்டுத்தனமாகப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டான் குதிரைக்காரன்.

வெள்ளைச்சியின் கூச்சலைக் கேட்டு உதவிக்கு வருவதற்கு அங்கு ஆட்கள் இல்லை. ஆனால், அன்று தற்செயலாக ராமசந்திரன் அப்பக்கம் வந்தான்.

தூரத்தில் வரும்பொழுதே வெள்ளைச்சியின் நிலையைப் பார்க்க நேர்ந்தது. முதலில் அவன் வெள்ளைச்சி என்று நினைக்கவில்லை.

கிட்ட நெருங்கியதுந்தான் அவனுக்குத் தெரிந்தது. வெறி பிடித்தவன் போல அவ்விருவரையும் தாக்கினான்.

சின்னான் முரடன். ராமசந்திரன் அடிக்கப் பார்த்துக் கொண்டிருப்பானா? தடியைப் பிடுங்கிக்கொண்டு அவன் வெளுத்துவிடவே, ராமசந்திரன் மூர்ச்சையாகி விழுந்தான்.

அவனுக்குப் பிரக்ஞை வரும்பொழுது வெள்ளைச்சியின் கூக்குரல்தான் கேட்டது. மெதுவாக எழுந்து அவள் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.

வெள்ளைச்சி அவனைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பியழுதாள். சில சில சமயம் ரௌத்திராகாரமாகக் காளியைப் போல் இடிக்குரலில் பிதற்றுவாள்.

ராமசந்திரனுக்கு வலி சகிக்க முடியாது போனாலும், யாராவது கொஞ்சம் தைரியத்துடன் இருந்தால்தானே வீட்டிற்குப் போகலாம்!

இருவரும் நேரே மருதியின் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

மருதிக்கு, அவர்கள் செய்தியைக் கேட்டதும் பேரிடி விழுந்தது போல் ஆயிற்று.

அதிலும், தன்னைக் கெடுத்த பாவியின் கையாள்தான் மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச் சின்னான். குய்யோ முறையோ வென்று கூவிக்கொண்டு ஸ்டோர் மானேஜர் பங்களாவிற்கு ஓடினாள். அவர் அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் மரகதமும் தாமோதரனும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஓடிவந்த மருதி, “என்னைக் கெடுத்த பாவி, என் மகளையும் குலைத்தாயே!” என்று ஒரு கல்லைத் தூக்கி அவர்மீது போட்டாள். நெற்றிப் பொருந்தில் பட்டு உயிரைப் பறித்துச் சென்றது கல்!

தாமோதரன் மருதியை ஓங்கியடித்தான். அவள் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள்.

மரகதம் தகப்பனார் மீது விழுந்து கதறினாள். வேலைக்காரர்கள் வந்து கிழவரை உள்ளே எடுத்துச் சென்றார்கள்.

இதற்குள் நடந்த விஷயம் கூலிக்காரர்களுக்குள் பரவி விட்டது. அவர்கள் எல்லோரும் கம்பையும் தடியையும் எடுத்துக் கொண்டு துரை பங்களாவின் பக்கம் ஓடினார்கள்.

சின்னான் அங்குதான் இருப்பான் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்பொழுதுதான் தூங்கி விழித்த துரை, துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார். கூட்டம் அடக்கக்கூடியதாக இல்லை.

மறுபடியும் உள்ளே போய், கொழும்புப் போலீஸாரை டெலிபோனில் அழைத்துவிட்டு, அவர் கூட்டத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் சின்னான் வீட்டில் தீ வைத்துவிட்டது. ஆனால், சின்னான் பைத்தியக்காரனல்லன். கூட்டம் வருமுன்பே எங்கோ ஓடிவிட்டான்.

கூலிக்காரர்களின் கூட்டம் ஸ்டோர் மானேஜரின் வீட்டுப் பக்கத்தை நாடியது.

கூலிக்காரர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று தெரிந்ததும் ராமசந்திரனுக்கு பயம் அதிகமாகியது. மரகதத்தையும் அவள் வீட்டிலுள்ளவர்களையும் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட்டான்.

வெள்ளைச்சியிடம் தன் மனத்தில் உள்ளதைக் கூறினான். அவளுக்கு முதலில் சம்மதமில்லை. பிறகு அவன் இஷ்டத்திற்காகச் சென்றாள். அங்கு போனதும்தான் நடந்த சமாச்சாரம் தெரிந்தது. மரகதத்தையும் தாமோதரனையும் அழைத்துக்கொண்டு துரை பங்களாவிற்கு வந்தான்.

மருதிக்குக் காவலாக வெள்ளைச்சி நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது கூட்டம் அவர்கள் வீட்டை நோக்கி வந்தது.

வெள்ளைச்சி முரட்டுத் தைரியம் கொண்டவள்: “கிழவன் போய்விட்டான், இனி ஒன்றும் செய்ய வேண்டாம்!” என்று கூவினாள்.

கூட்டத்தில் பலருக்கு அவ்வித அபிப்பிராயம் கிடையாது. ஆனால் முதல் ஆவேசம் அடங்கிவிட்டது. எல்லோரும் மெதுவாகத் திரும்பினார்கள்.

மருதிக்குப் பிரக்ஞை வந்தது; ஆனால் சித்தம் தெளியவில்லை.

ராமசந்திரன் துரையிடம் நடந்த சமாசாரங்களைக் கூறினான். துரையோ அநுபவம் பெற்றவர்.

குற்றம் அதிகாரிகள் பக்கம் இருக்கிறது என்று தெரிந்ததும் சமாதானம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிந்து கொண்டார். பத்திரிகையில் கம்பெனியின் பெயர் அடிபடுவதில் அவருக்குப் பிரியமில்லை.

அன்று விடியற்காலம் போலீஸ் பட்டாளம் ஒன்று வந்தது.

விவகாரங்கள் ஒரு விதமாக முடிவதற்குக் காரணம் துரைதான். துரை கொலையை நாஸுக்காக அமுக்கிவிட்டார். பத்திரிகைகளில் இந்த விஷயம் வெளிவரக் கூடாது என்பதே அவர் கவலை.

மருதிக்குப் பைத்தியம் தெளியவேயில்லை. அவளும், வெள்ளைச்சியும், ராமசந்திரனும் எங்கோ சென்றுவிட்டார்கள்.

‘வாட்டர் பால’த்தில் மறுபடியும் அமைதி குடிகொண்டது; தேயிலை உற்பத்தியில் அது தன்னை மறந்தது.

மரகதம்! அவளும் இப்பொழுது ‘வாட்டர் பால’த்திலில்லை.

தாமோதரன் இப்பொழுது நெல்லூர்ப் பக்கத்தில் வாத்தியாராக இருக்கிறானாம். அவனுடன் மரகதம் இருப்பதைப் பார்த்தால் அவர்களுக்குக் கலியாணமாகிவிட்டது என்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறது. அப்படித்தான் பலரும் சொல்லிக்கொள்கிறார்கள்.

முற்றும்

மணிக்கொடி, 31-03-1935, 14-04-1935, 28-04-1935

License

துன்பக் கேணி Copyright © by manarkeni. All Rights Reserved.