="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

50 சிவசிதம்பர சேவுகம்

சிவசிதம்பர சேவுகம்

1

தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால் மேற்கு ரத வீதி வர்த்தகர்கள் அவரை சாமி, சாமி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். கழுத்துப்பிடரி வரை வளர்ந்த சிகை; அதாவது அள்ளிச் சொருகி, நிலைகுலைந்து தவழும் சிகை; நரையோடி நெஞ்சை மறைக்கும் தாடி; கண்ணுக்கு மேல் பார்த்து சாரம் கட்டிவிட்ட மாதிரி புருவம்; மல் வேஷ்டி, சிட்டி துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில் வறுமையில் இருளடித்த ‘கர்ப்பக்கிருகம்’ – இவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை.

லேயன்னா மேனா வீனா ஜவுளிக் கடையில் அவருக்கு சேவகம். பட்டணத்திலே அந்தக் காலத்தில் குண்டு விழுந்தபோது, முறிந்து மூடிய ஜவுளிக்கடை ஒன்றின் ‘ஸ்பிளின்டர்ஸ்களாக’ திருநெல்வேலி மேற்கு ரத வீதியில் வந்து விழுந்தார். அன்று விழுந்த இந்தச் சதைப்பிண்டம் இன்றும் நாடியின் தாள அமைதி குன்றாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. அவர் மாறியது கிடையாது. அவரது குடும்பமும் மாறியது கிடையாது.

அவருடைய சேவகமும் மாறியது கிடையாது. அவர் வந்தபோது லேயன்னா இருந்தார்; தாமிரவருணி ஆற்றில் பெருவெள்ளம் வந்து பையன்களைப் பரீட்சைக்குப் போகவிடாதபடியடித்து, ஊழியின் இறுதிக் காலத்தைக் கோடு போட்டுக் காட்டியபோது மேயன்னா இருந்தார்; சற்றுக் கண் விழித்து எழுந்த விராட புருஷன் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்த மாதிரி வந்த 1930-ம் வருஷ உப்பு யுகம் வந்த போது வீயன்னா இருந்தார்.

இப்பொழுது இம்மூன்றும் கலந்து தேசத்தை நெருக்கிய போது, விலாச முதலாளிகளின் புதல்வர்கள் பெயரால் கடை நடந்து கொண்டிருந்தது. முறையே மூத்த மக்கள் மூவரும் தம்முள் அத்தான் மைத்துனர்களாகி விட்டார்கள். அவர்கள்தானிருந்து கடையை நடத்துகிறார்கள். மற்றவர்கள், லேயன்னாவுக்கு இவர் தவிர ஒரு மகனும், மற்றும் இருவருக்கும் முறையே இரண்டிரண்டு பேரும் உண்டு. இவர்கள் சர்க்கார் முதல் மார்வாடி சேட் மாவுத் தொழிற்சாலை வரையுள்ள பெரிய வர்த்தக ஸ்தாபனங்களில் சேவகத் தொழில் செய்து கொண்டிருந்தார்கள்.

எப்போதோ ஒரு தடவை எட்டிப்பார்ப்பது, ஏட்டுக் கணக்குகளைப் பார்ப்பது, பிறகு ‘ஒத்தி வைத்த’ நலத்துக்காக சேவகம் செய்து சம்பளம் வாங்குவது, இப்படியே ஓடிய ரத்த பந்த சக்கரத்துக்குப் பின்னால் இழையாக அமைந்திருந்தார் சிவசிதம்பரம் பிள்ளை. சிவசிதம்பரம் பிள்ளைக்குத்தான் ஆதி முதல் அந்த ஜவுளிக்கடையின் உட்கணக்குத் தெரியும்; கடையின் மேசைப் பெட்டி மாதிரி, புத்தியும் ஜீவனும் விவேகமும் உள்ள மேசைப் பெட்டி மாதிரி, அவர் இருந்து வந்தார்.

2

சிலர் பூட்டின் வாயிலேயே சாவியைத் தொங்கப் போட்டிருப்பார்களல்லாவா, அதேமாதிரி இந்த இளவட்ட முதலாளிகளும் இவரது மடியிலேயே சாவியைப் போட்டு வைப்பார்கள். அதாவது இவரது மடியில் அல்லது மூத்த பிள்ளை வள்ளியூர் லெச்சமணப்பிள்ளை பெட்டக சாலை கிழக்குச் சுவர் காந்தி படத்துக்குக் கீழே அல்லது சிவசிதம்பரம் பிள்ளை இடுப்பில் சாவி தொங்கிக்கொண்டிருக்கும்.

தான் உண்டு, தன் கணக்கு உண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பவராகையால் முதலாளிகளுக்கு இவர் யாரோ காவேரிப் பாசனத்து மருதூர் கார்கார்த்த வேளாளர் என்பது மட்டும் தெரியும். சிவசிதம்பரம் பிள்ளை அதற்கு மேல் யாரையும் தெரிந்துகொள்ள விடுகிறதில்லை. லேயன்னாவினுடைய மூத்த மகனுக்கு கணக்குத் தப்பாமலிருப்பதில்தான் குறி. யாராயிருந்தால் என்ன; பேசுகிற பேரேடு என்று நினைத்து, அதற்குமேல் அவரைப் பற்றிச் சிந்திக்கிறதில்லை.

அவர் ‘மெட்டிக்கிலேஸனுக்கு’ ஒரு வகுப்பு முந்தி தோத்துப்போய் பள்ளிக்கூடத்துடன் ‘கத்திகிட்டு’ வந்துவிட்ட காலம்; மைனர் பிள்ளையாக நடமாடுவதற்கு சற்று கால் தள்ளாட ஆரம்பித்தபோது, சிவசிதம்பரம் பிள்ளையின் ‘உத்தியின்பேரில்’ ஒரு தாலியும் கட்டி, வீட்டோ டு கட்டிப்போட்டு மேல ரத வீதி ஜவுளிக்கடை சொருகு பலகைகளுக்குள் சென்று வெளிவரும் சரக்கானார்கள். லேயன்னா கண்ணை மூடிய பிறகுதான் அவர் முதலாளி ஸ்தானத்துக்கு வந்து அப்பால் சென்று உலாவும் சரக்காகப் பரிணமித்தார்.

லேயன்னா கண்ணை மூடும்போது, “செலம்பரம், செலம்பரம்” என்ற ஜெபந்தான். பிரிவு, கடையைப் பிரித்துவிடாமல் சிவசிதம்பரம் பிள்ளைதான் இருந்து லேயன்னா கடைப் பங்கு வகையராவையும், கன்னடியன்கால் பாசன நன்செய் வகைகளையும் ஈவு செய்து மக்களுக்குள் குடுமிப்பிடி வராமல் பார்த்துக் கொண்டார்.

3

கடை மேற்பார்வை பிறகு மேயன்னா வசம் இருந்து, அவர் காலத்துக்குப் பிறகுதான் லேயன்னாவின் மூத்த மகன் வசம் திரும்பியது. மேயன்னாவுக்கு வில்லங்க சொத்துக்கள் கொஞ்சம் உண்டு. அதைத் திருப்புவது, அகப்படுகிற சாமியார்களை எல்லாம் கும்பிட்டு ரசக்கட்டு சோதனையில் இறங்குவது தவிர வேறு எதிலும் நாட்டம் செலுத்த ஜீவிய காலம் முழுவதிலும் சவுகரியமே கிடைத்ததில்லை.

மண்ணாந்தைச் சாமியிடம் வாகடநூல் சோதனையிலீடுபட்டிருக்கும் போதுதான் வீரபாகு பிள்ளை வந்து “நம்ம சவுந்தரத்தை, பழமலைக்குக் கட்டிப்போட்டு விடலாம் என்று நினைப்பதாக”ச் சொன்னார்கள். “அதுக்கென்ன சவுகரியப்படி செய்யிங்க, ரசத்தை மொறையாக் கெட்டினா, அட்டதிக்கும் கட்டியாளலாம், சாமி சொல்லுதாக” என்றார் மேகலிங்கம் பிள்ளை.

“அட்ட திக்கும் கட்டியாளுவது அப்புறம் இருக்கட்டும், ஒங்க கேசு நாளைக்கு வருதாமே, அதுக்கு என்ன செய்ய உத்தேசம்” என்றார் வீரபாகு பிள்ளை. “செலம்பரத்தை வக்கீல் ஐயரிடம் அனுப்பி இருக்கேன். எல்லாம் அவன் பார்த்துக்கிடுவான். நம்ப சாமிக்கு கோவில் திருப்பணி செய்யணும்னு நாட்டம்; வடக்குப் பிரகார பொற்றாமரைக் கொளத்துப் படிகளை எடுத்துக் கட்டினா என்னான்னு கேக்கராஹ” என்றார் மேகலிங்கம் பிள்ளை. “ஆமாம் உங்களுக்கு வேலையும் தொளிலும் இல்லை, ரசத்தை கெட்டட்டா குளத்துப்படியைக் கெட்டட்டா என்று கருத்துப் போகுது! மொதல்லெ, ஒங்க பொண்ணுக்கு வாசல்லெ வந்த வரனைப் பார்த்துக் கெட்டி வையுங்க” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார் வீரபாகு பிள்ளை.

லெச்சுமணப் பிள்ளை ஜேஷ்டகுமாரன் பழமலைக்கும், மேகலிங்கம் பிள்ளை புத்திரி சவுந்தரத்துக்கும் கல்யாணமாயிற்று. பழமலை பழையபடி வரட்டு வேளாளனானான். மண்ணாங்கட்டிச் சாமிக்கு கோவில் திருப்பணிக்குத் தொகை கிடைத்தது. வக்கீலய்யருக்கு வழக்கை ஈரங்கி ஒத்திப்போட்டு சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டு போக சவுகரியம் கிடைத்தது.

4

லேயன்னா காலமானார். கடையை மேகலிங்கம் பிள்ளை பார்த்துக் கொள்ளுவதுதான் முறை என்றார் வீரபாகு பிள்ளை. அவருக்கு ஜில்லா போர்ட் ரஸ்தா குத்தகை, தலைக்கு மேல் வேலையாக இருந்தது. யாரையாவது கெடுப்பது என்றால் மண்ணை வாரிப்போடுவது என்பது, யாரையும் கெடுத்தல் என்பதுதான் தமிழில் வெகுஜன வாக்கு. வீரபாகு பிள்ளை ரோடின் தலையில் கப்பிக் கல்லையும் மண்ணையும் வாரி வாரிப் போட்டுக்கொண்டே இருந்தார்; பிறகு அதில் மறுபடியும் ரிப்பேர் நடத்த லாயக்காக பஸ் செர்விஸ் நடத்தினார். அதனால் மேகலிங்கம் பிள்ளை கடையைப் பார்த்துக் கொள்ளுவதுதான் முறை என்ற நியாயம் அவருக்குப் புரிந்தது.

மேகலிங்கம் பிள்ளை கடைக்கும் வந்து போகலானார். மண்ணாந்தைச் சாமியாரும் கோவில் திருப்பணிகளில் ரொம்ப ஊக்கம் காட்டினார். இப்படிக் கொஞ்ச காலம் சிதம்பரம் பில்ளையின் விசுவாச பாத்திரம் சற்று மாறியது.

இப்பொழுது சிவசிதம்பரம் பிள்ளை இகபர சுகங்கள் இரண்டுக்காகவும் பண வசூலுக்குப் புறப்படுவார். ஒன்று கடை வரவு செலவு, இன்னொன்று திருக்குள வரவு செலவு. அவர் இவ்விரண்டு சேவகங்களையும் பகிர் நோக்கு இல்லாமலேயே கவனித்தார் என்றால் நிஷ்காம சேவையில் அவருக்கு இருந்த அளவு கடந்த மனப்பக்குவத்தால் அன்று; அவருக்கு அப்படி ஒரு பிரயோகம் இருப்பதாகவே தெரியாது. பிரதிப் பிரயோசனம் எல்லாம் ஜவுளிக்கடை பசியாற்றுவதற்குப் போதும் என்று நிர்ணயம் செய்து கொடுத்துவரும் சம்பளமேயாகும்.

மேகலிங்கம் பிள்ளைக்கு திடீரென்று காலன் வந்தான். ‘கிடக்கப்படுத்தார், கிடந்தொழிந்தாரே’ என்ற வாக்கு பூர்ணமாகப் பலித்தது. கர்மம் முதலிய சகல கிரியைகளும் முடிந்தபின்பு கடை கணக்கைப் பரிசோதனை செய்ததில் மேயன்னா பங்குக்கு மேல் பற்று வகையறாவாக பதினையாயிரத்துச் செல் வளர்ந்து தொகை பற்றில் இருந்தது தெரிந்தது.

5

வீரபாகு பிள்ளை திடுக்கிட்டார்! இதில் எவ்வளவு ரசவாதப் புகையாகப் போச்சு, எவ்வளவு சட்ட வக்கணை வியவகாரத்தில் மறைந்தது என்று புலன் கண்டு சொல்லுவதே கடினமாகிவிட்டது. இது தவிர கப்பலில் பாதிப் பாக்குப் போட்ட கதையாக மண்ணாங்கட்டிச் சாமியார் திருவிளையாடல் எவ்வளவு குழி தோண்டியது என்பது பிரம்ம ரகசியம் போல திக்குமுக்காட வைத்தது.

“என்னவே, இடிச்ச புளி மாதிரி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினீர், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?” என்றார் வீரபாகு பிள்ளை. சிவசிதம்பரம் பிள்ளநக்கு ரொக்க வியவகாரம் இவ்வளவு ஓட்டை என்று அன்றுதான் தெரியும். “தெரிந்தால் விடுவேனா” என்று பதில் சொல்லிவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டார் சிவசிதம்பரம்பிள்ளை.

வீரபாகு பிள்ளைக்குத் தம்முடைய ரொக்கத்தைப் பற்றிக் கவலை பெரிதாயிற்று. பழமலையும், பால்வண்ணமும் – அதாவது மேயன்னாவுடைய பி.ஏ. படித்த மகன் – மைத்துனனும் மைத்துனனுமாச்சே, இரண்டு பேருமாகச் சேர்ந்துகொண்டு தம்முடைய ரஸ்தாவில் மண்ணைப் போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஏற்பட்டது. டெண்டர் பிடித்துப் பழக்கமல்லவா, தன் மகளைப் பால்வண்ணத்துக்குக் கொடுத்து, இந்தப் பக்கத்தில் முடிச்சை இறுக்கிப் போட்டால் அதில் தப்பிதம் இல்லை என்று நினைத்தார். நினைத்தபடி நடத்துவதில் காலத்தை வீணாக்கவில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் தண்ணீர் வசதி இல்லாத் தாலுகா குமாஸ்தாவாகப் பால்வண்ணம் புறப்பட்டபொழுது மீனாட்சியும் தொடர்ந்தாள்.

மண்ணாந்தைச் சாமியாருக்கு பக்தன் மண்ணாகிவிட, குளப்பறி திருப்பணி முன்போல் அவ்வளவு சீராக நடக்கவில்லை. ரொம்ப நாள் பழகினாலும் கடவுள்கூடப் புளித்துப் போவார் அல்லவா. திருநெல்வேலி சைவ வேளாள குலதிலகங்களுக்கு ஏககாலத்தில் தக்ஷிணாமூர்த்தியாகவும், கும்பமுனியாகவும் தென்பட்ட மண்ணாந்தைச் சாமியார், போகராக ஆகிவிட்டார்!

6

குலதிலகங்களின் சம்மத வரம்புக்கு மீறிய அளவில், பிள்ளைவரம் கொடுக்கப் புகுந்ததாக சாமியார் மீது புகார். அவர் அங்கிருந்து அந்தர்த்தானமாகி, பட்டிவீரன்பட்டி கந்தவேள் ஆலயத்தின் மேற்குக் கோபுரவாசல் திருப்பணியில் ஈடுபட வேண்டியதாயிற்று. இப்படியாக மேயன்னாவின் ஆசைகள், திருவிளையாடல்கள் எல்லாம் ஜவுளிக் கடை பேரேட்டுக் கணக்கைத் தவிர மற்ற இடத்தில் தடந்தெரியாது போயிற்று.

திருநெல்வேலிச் சீமான்கள் தெய்வத்தை சந்தியில் விட்டுவிட்டு ஓடிப்போக மாட்டார்கள். போன கணக்கைக் குளத்தில் போட்டுத் தூற்றுவிட்டு, திருப்பணியையாவது அரையும் குறையுமாக நிற்காமல் நிறைவேற்றிவிட ஆசைப்பட்டார்கள். திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் ரஸ்தா குத்தகையில் எதிர்பார்த்த வரம்புக்கும் அதிகமாகக் கணக்கு லாபம் காட்டியதால், திருப்பணிக்கு என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து, பழமலை கடையையும், சிவசிதம்பரம் பிள்ளை கோயில் திருப்பணியையும் பார்த்துக் கொள்ளுவது என்று சேவகப் பங்கீடு செய்துவைத்தார். சிவசிதம்பரம் பிள்ளைக்கு ஜவுளிக்கடை நிழல்போய் ஆயிரங்கால் மண்டப நிழலும், நரி வௌவால் நெடியும் பரிச்சயமாயிற்று.

7

சிவசிதம்பரம் பிள்ளை சொப்பனத்திலிருந்து விழித்துக் கொண்டதுபோல் தம் வாழ்வின் பேரேட்டுக் கணக்கைப் பார்த்தார். ஐந்து பெண்கள், எம்டன் குண்டு போட்டபோது கிடைத்துவந்த சம்பளம், குடவயிறு, சில நரையோடிய தலைமயிர்கள் – இவைதான் இவரது வரவிலிருந்தது. மற்றதெல்லாம் பற்றிலிருந்தது. எம்டன் போட்ட குண்டு விரட்டின காலத்திலிருந்து மேயன்னா கண்ணை மூடிவிட்ட நேரம் வரை அவர் வாழ்வு தனிச்சாகை பிடிக்கவில்லை. ஜவுளிக் கடையும் மூன்று குடும்பமும் அவர்களது வாழ்வும் போக்குமே இவரை இழுத்து வந்திருக்கிறது. குதிரை லாயத்தை எட்டும் நேரத்தில் குத்துப் புல் கூட அகப்படவில்லை என்றால்… இதுவரை இந்த மாதிரி நினைத்ததே கிடையாது. ஐந்து பெண்களைக் கரையேற்ற வேண்டுமே; அவருக்கு நினைக்க நினைக்க மூச்சே திணற ஆரம்பித்தது. நெஞ்சு சுளுக்கிக் கொள்ளும் போலிருந்தது.

ஆனால் ஒன்றில் பரமசுகம். படித்துறை கட்டிக் கொண்டிருப்பதில் பரமசுகம். நிச்சிந்தையாக, யாரோ கொடுக்கிற பணத்தைக் கொண்டு ஏதோ தெய்வத்துக்குச் சேவை நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. சிற்றுளியும் டொங் டொங் என்று எதிரொலிக்கிறது. நரி வௌவால் கிறீச்சிடுகிறது. எங்கு பார்த்தாலும் கருங்கல் தளத்தின் எதிரொலி.

அதிலிருந்துதான் அவருக்கு தாடி வளர ஆரம்பித்தது. இடையிடையே நரையோடிய தாடி வளர ஆரம்பித்தது. ஒரு வரிசை முடிந்தவுடன், பிறகு மறுபடியும் பணவசூல், அப்புறம் கட்டுமான வேலை. கோவிலிலே வசனம் இருந்தமாதிரி சேவகம். முன்பு நரசேவகம். இப்பொழுது தெய்வ சேவகம்.

லோகத்திலும் அயோக்கியர்கள் நடமாடுகிறார்கள்; தெய்வ சந்நிதிதானத்திலும் நடமாடுகிறார்கள். அங்கே வியாபாரார்த்தமாக மனசை அடமானம் வைக்கிறார்கள்; இங்கே உலகத்தை உய்விக்கும் பரந்த நோக்கத்துடன் வியாபாரார்த்தமாக மனசை அடமானம் வைக்கிறார்கள். மானத்தை விற்கிரயம் பண்ணுகிறார்கள். பொற்றாமரைக் குளம் இடிந்து கிலமாகுமுன்பு அதன் ஜீவ முடிச்சு இடிந்து கிலமாகிவிட்டது. அது அவருக்குத் தெரியாது. நிச்சிந்தையாகப் படித்துறை கட்டிக்கொண்டு இருக்கிறார்; அதாவது, செத்துப்போன உடலத்துக்கு ரணசிகிச்சை செய்து, பாண்டேஜ் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி சட்டத்தின் அடித்தளத்திலே அமைந்த சர்க்காரின் நிழலுக்குள்ளேதான் சாமியே தஞ்சமாகிவிட்டார். இன்று அவரைப் பட்டினி போடலாம்; அவர் கணக்கை ஆடிட் செய்யலாம்; ஆனால், பட்டினி கிடக்கும் மனுஷனுக்கு ஐயோ பாவம் என்றிரங்கி, கால் காசு எடுத்துப்போட அவர் நினைத்தால் அவருடைய கையை முறித்துப் போடுவார்கள்.

8

அவருக்குக் குளிக்க குளம் வேண்டாமா? அவருடைய பக்தர்களின் மனப்பாசியை அகற்ற பொற்றாமரைக் குளம் வேண்டாமா? சிவசிதம்பரம் பிள்ளை நிச்சிந்தையாகக் குத்துக்கல்லில் உட்கார்ந்து குளப் படி கட்டிக் கொண்டிருக்கிறார். டொங் டொங் என்று சிற்றுளிச் சத்தம் ஆயிரக்கால் மண்டபத்தில் எதிரொலிக்கிறது.

ஐந்து பெண்களுக்குக் கலியாணம் இன்னும் ஆகவில்லை என்று அது எதிரொலிக்கிறது. அந்த சத்தம் அவருக்கு மனசில் அந்த நினைப்பை அகற்றுகிறது. பற்றில்லாமல் திருப்பணி செய்து, மறுபிறவியில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டுவந்து இவர் கலியாணம் செய்து வைப்பார் என்று மக்களனைவரும் காத்துக் கொண்டிருந்துதான் முடியுமா? தெய்வம் சிருஷ்டித்ததே ஒழிய தர்ம சாஸ்திரத்தையும் கையில் எழுதி நம் கையோடு கொடுத்தனுப்பியதா? இவர்களது கலியாணத்துக்கு தெய்வம் எப்படிப் பொறுப்பு? கொஞ்சம் பொய் சொன்னால், முதல் மக்கள் கலியாணத்தைக் கூட முடித்துவிடலாம். அப்புறம் மண்ணாந்தைச் சாமி மாதிரி ஓடுவதற்கு சிவசிதம்பரம் என்ன, கால்கட்டு இல்லாத நபரா?

சிற்றுளி டொங் டொங் என்று ஒரு நாதத்தை எழுப்பி அந்த லயத்தில் மனப்போக்கை மிதக்க விட்டது. சிவசிதம்பரம் பிள்ளை தாடியை நெருடிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஐயா, ஒங்க முதலாளி ஐயா தவறிப் போனாக தெரியுமா? மோட்டார் மரத்திலே மோதி, ஒங்க வீரபாகு பிள்ளைதான். என்ன ஒரு மாதிரி” என்றது ஒரு குரல்.

“இன்னும் ஒரு வரிசைதான் பாக்கி, இன்னம் இருநூற்றி ஐம்பது இருந்தால் போதும்” என்றார் சிவசிதம்பரம் பிள்ளை.

முற்றும்

தமிழ்மணி பொங்கல் மலர், 1944

License

சிவசிதம்பர சேவுகம் Copyright © by manarkeni. All Rights Reserved.