="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

18 கடவுளின் பிரதிநிதி

கடவுளின் பிரதிநிதி

1

சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.

அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.

அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.

கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்
சோறுகண்ட மூளி யார் சொல்.

சிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.

ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.

இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.

இரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.

சேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.

ஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.

ஊர்க்காரர்களுக்குச் சுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.

ஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.

2

கோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.

கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.

ஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.

அது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.

திரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.

ஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.

அவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.

அன்று சாயங்காலம்.

மேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.

துவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

முதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.

3

பிறகு-

ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

கோவிலுக்குள்ளா?

“அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?” என்றார்.

“காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்” என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.

திரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.

சுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா? பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ? இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்? கலக்கம், சந்தேகம், குழப்பம்.

உள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.

“பதிதன்! சண்டாளன்! துரோகி! கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்” என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.

உடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.

துவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.

இப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது? நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.

ஊர் அன்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது.

4

இந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். ‘சாமி’களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா?

திரு.சங்கர் என்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.

தூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.

இதை எதிர்பார்க்கவில்லை.

திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.

5

சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.

அதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே?

வெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.

ஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.

அங்கு அவர் இல்லை.

கோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.

அங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.

திரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை.

அவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.

திரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட நேரமில்லை.

அவ்வளவு தலைவலி.

உணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.

அன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.

நடுநிசி!

சாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.

“இதுவரை நடந்துவந்தது உண்மையா? அவர் சொல்லுவது உண்மையா? பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா?”

இந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம்! என்ன சோகம்! என்ன நம்பிக்கை!

சங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.

“ஏ! தெய்வமே, நீயும் உண்மைதானா?”

இதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.

மணிக்கொடி, 25.11.1934

License

கடவுளின் பிரதிநிதி Copyright © by manarkeni. All Rights Reserved.